23. இராமேஸ்வரம்

இராமேஸ்வரம், இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது இந்தியாவில் புனித நகரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது வங்கக் கடலில் உள்ள மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ளது. இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பிறந்த ஊர் இராமேஸ்வரம் நகரமாகும்.

இராமபிரான் சிவலிங்கம் வைத்து அவரை வழிபட்ட காரணத்தினால் இத்தலத்திற்கு இராமேஸ்வரம் என்று பெயர் ஏற்பட்டது. வடக்கே உள்ள காசியும் தெற்கே உள்ள இராமேஸ்வரமும் இந்துக்களின் சிறந்த புண்ணியத் தலங்களாகக் கருதப்படுகின்றன. காசிக்கு புனிதப் பயணம் சென்றவர்கள் இராமேஸ்வரம் தலத்திற்கு வந்து தனுஷ்கோடி தீர்த்தத்தில் நீராடி இராமநாதரை வழிபட்டால் தான் காசி தலப்பயணம் முழுமை அடைந்ததாகும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும்.

இராமாயணம் எவ்வளவு பழமையானதோ அவ்வளவு பழமையானது இராமேஸ்வரம். இந்தியாவில் மிகவும் தெய்வீகத் தன்மையுடையதாக கருதப்படும் கோவில்களில் இராமேஸ்வரம் ஒன்றாகும். இராமேஸ்வரம் கோவிலுக்கு வந்து மூலவர் இராமநாதரை வழிபடுவதும், அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படும் சமுத்திரக் கரையில் நீராடுவதும் ஒவ்வொரு இந்துவும் தன் வாழ்நாளில் செய்ய வேண்டிய கடமையாகக் கருதப்படுகிறது.

இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாக இந்த இராமேஸ்வரம் கோவில் உள்ளது.  இந்த கோவிலின் தற்போதைய வடிவமைப்பு 12-ம் நூற்றாண்டில் பாண்டியர்களால் கட்டப்பட்டது என நம்பப்படுகிறது. கலையும், கட்டிடக்கலையும் இந்த கோவிலின் அற்புதங்களில் ஒன்றாகும்.  சிவபெருமானுக்கான இந்த கோவிலுக்கு வருடம் முழுவதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

தமிழகத்தின் பெரும்பகுதியையும் இராமேஸ்வரத்தையும் இணைப்பதுதான் பாம்பன் பாலம். இந்த இடத்தில் தரைவழி மற்றும் ரயில் பாதை இருந்தாலும், ரயில் பாதையே பாம்பன் பாலம் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் மிகப் பெரிய கடல் பாலங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது இந்தப் பாலம். இந்த பாலமானது பெரிய கப்பல்கள் வரும்போது தூக்கப்பட்டு வழிவிடும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

காந்தமதனா பர்வதம் என்ற மலையின் உச்சியில் ராமர் பாதம் என்று அழைக்கப்படும் கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து, தெளிவான நீலநிறத்தில் இருக்கும் கடலையும், அதைச்சுற்றியுள் மரகத பச்சை நிறத்தில் இருக்கும் தீவையும் காண்பது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும். அதேபோல், பாக் நீரிணைப்பின் ஒரு பகுதியில் அமைந்துள்ள அரியமான் கடற்கரை, சுற்றுலாப் பயணிகளுக்காக, நன்றாக பராமரிக்கப்பட்டு வருகிறது. நாள் முழுவதும் மென்மையான குளிர்காற்று தவழ்ந்து வரும் இந்த கடற்கரை சுற்றுலா வருவதற்கு மிகவும் ஏற்ற இடமாகும். இராமேஸ்வரம் தீவின் மனம் மயக்கும், கம்பீரமான தோற்றத்தைக் காண சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கிறார்கள்.

திருக்குறள்

அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது.                          (குறள்:181)

ஒருவன் அறத்தைச் சொல்லாமல் பாவமே செய்தாலும், அடுத்தவரைப் பற்றிப் புறம் பேசமாட்டான் என்றால் அதுவே அவனுக்கு நல்லது.

Though one do not even speak of virtue and live in sin, it will be well if it be said of him “he does not backbite”.

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.                                   (குறள்: 95)

தகுதிக்குக் குறைவானவரிடமும் பணிவுடன் இனிய சொற்களைச் சொல்பவனாக ஆவது ஒருவனுக்கு ஆபரணம் ஆகும்; பிற அணிகள் அணி ஆகா.

Humility and sweetness of speech are the ornaments of man; all others are not (ornaments).

19. திருக்குற்றாலம்

குற்றாலம் என்றவுடன் நினைவுக்கு வருவது குற்றால அருவி. குற்றால அருவி என்றவுடன் நினைவுக்கு வருவது எண்ணெய் குளியல், குளிர்ச்சியான வானிலை, மேற்குத் தொடர்ச்சி மலையில் ஆக்ரோசத்துடன் கொட்டித்தீர்க்கும் தண்ணீர். குற்றால அருவி, அல்வாவுக்கு பேர் போன திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. தென்காசிக்கு மிக அருகில் இருக்கிறது. இங்குள்ள குற்றாலநாதர் கோயில் பெயர் பெற்றது.

குறு ஆல் என்பது ஒருவகை ஆலமரம். அத்தகைய மரங்கள் அதிகமாகக் காணப்படும் வனப்பகுதி என்பதால் குற்றாலம் எனும் பெயர் ஏற்பட்டது. குற்றால அருவியில் குளிக்கும் சுகமே தனி! மற்ற அருவிகளில் குளியல் வெறும் பொழுதுபோக்காகவே இருந்துவரும் நேரத்தில், குற்றாலம் மருத்துவக் குணம் வாய்ந்தது.

இந்த அருவிகள் பல மூலிகைச் செடிகளைத் தழுவி வந்து பாய்வதால் இந்த அருவிகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை தண்ணீர் ஆர்ப்பரித்து பாயும். இந்த அருவிகளுக்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து போகிறார்கள். தண்ணீர் கொட்டும் இந்த மாதங்கள் குற்றால சீசன் என்று அழைக்கப்படுகிறது. குற்றாலம் முழுவதும் மொத்தமாக ஒன்பது அருவிகள் பாய்கின்றன.

குற்றாலத்தின் மிக முக்கியமான அருவி பேரருவி. செங்குத்தான பாறையில் இருந்து பாயும் தண்ணீரைப் பார்க்கக் கண் கோடி வேண்டும். சுற்றுலாத் துறை அருவிக்கு மிக அருகில் ஒரு தடுப்புச் சுவரைக் கட்டியுள்ளது. இந்தச் சுவர்தான் அருவியின் வீரியத்தை அளக்க உதவுகிறது. சுவரையும் தாண்டி தண்ணீர் கொட்டினால், அருவி மிகவும் ஆர்ப்பரிக்கிறது என்று அர்த்தம். அப்படி சுவரைத் தாண்டி கொட்டும் நேரத்தில் குளிக்கத் தடை விதிக்கப்படும்.

அடுத்து, பார்க்க வேண்டிய அருவி, சிற்றருவி. இது பேரருவிக்கு மேலே இருக்கிறது. பேரருவிக்கு இந்த அருவியில் இருந்துதான் தண்ணீர் வருகிறது. கிட்டத்தட்ட பேரருவி போன்ற சூழலே இங்கும் இருக்கும்.

அடுத்த முக்கியமான அருவி, செண்பகாதேவி அருவி. பேரருவிக்கு மேல் கிட்டத்தட்ட காடு போன்ற பகுதியில் இயற்கையை ரசித்துக் கொண்டே நடந்து இந்த அருவியை அடைய வேண்டும். இந்த அருவிக்கு அருகில் இருக்கும் செண்பகாதேவி அம்மன் கோவிலில் சித்திரா பவுர்ணமி நாளில் திருவிழா நடைபெறும்.

அடுத்த முக்கியமான அருவி, தேனருவி. பல தேன்கூடுகள் இங்கு இருப்பதால் இந்தருவிக்குத் தேனருவி என்று பெயர் ஏற்பட்டது. தேனீக்களாலும், அருவி அமைந்துள்ள இடத்தாலும் இந்த இடம் மிக அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதனால், இந்த அருவியில் குளிப்பது நிரந்தரமாக தடைசெய்யப்பட்டுள்ளது.

குழந்தைகளுடனும், குடும்பத்துடனும் சென்று குளிக்க சிறந்த அருவி, ஐந்தருவி. இது பேரருவியில் இருந்து ஐந்து கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. திரிகூடமலையில் தோன்றிச் சிற்றாற்றின் வழியே பாயும் இந்த அருவி பாறையில் இருந்து பாயும் இடத்தில் ஐந்து கிளைகளாகப் பிரிந்து பாய்கிறது.

இதை தவிர, பழந்தோட்ட அருவி, புலியருவி, பாலருவி என்று வேறு பல அருவிகள் உள்ளன. பேரருவியில் இருந்து எட்டு கி.மீ தொலைவில் அமைந்துள்ளது பழந்தோட்ட அருவி. புலியருவி இரண்டு கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இவை இரண்டும் பேரருவி போல் பிரமாண்டமாய் இல்லையென்றாலும் கூட மக்கள் கூட்டம் இல்லாததால் பல மணிநேரம் சுதந்திரமாய் குளிக்கலாம். பாலருவி தேனருவிக்கு அருகில் அமைந்துள்ளது. தேனருவியைப் போல் பாலருவியிலும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையெல்லாம் எப்போது அனுபவிப்போம் என்று ஏங்கிக் கொண்டிருப்போர் பலர். நீங்களும், இந்தியாவிற்கு போகும் போது குற்றாலத்தையும், அருவியையும் பார்க்க தவறாதீர்கள்.

திருக்குறள்

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.                                        (குறள்:131)

ஒழுக்கம், அதை உடையவர்க்குச் சிறப்பைத் தருவதால் உயிரைக் காட்டிலும் மேலானதாக அதைக் காக்க வேண்டும்.

Propriety of conduct leads to eminence; it should therefore be preserved more carefully than life.

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.                                             (குறள்:391)

கற்கத் தகும் நூல்களைப் பிழை இல்லாமல் கற்க; கற்ற பிறகு கற்ற கல்விக்கு ஏற்ப நல்ல வழிகளில் வாழ்க.

Let a man learn thoroughly whatever he may learn, and let his conduct be worthy of his learning.

17. சென்னை மாநகரம்

தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை. பரந்த மணற்பரப்புடன் கூடிய கடற்கரை, பூங்காக்கள் மற்றும் பல்வேறு வரலாற்று சின்னங்களை உள்ளடக்கியதாக சென்னை விளங்குகிறது. சென்னை நகரம் தென் இந்தியாவின் நுழைவாயிலாக கருதப்படுகிறது. சென்னை நகரில் உள்ள மெரினா கடற்கரை, உலகின் நீளமான கடற்கரைகளுள் ஒன்று.

இந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட செயின்ட் ஜார்ஜ் கோட்டையைச் சுற்றி இந்த நகரம் ஏற்படுத்தப்பட்டது. இந்த பகுதியை ஆங்கிலேயரிடம் ஒப்படைத்த வெங்கடபதி சகோதரர்களின் கோரிக்கையின் படி, இந்த பகுதியைத் அவர்களுடைய தந்தையின் பெயரால் சென்னப்பட்டணம் என்று அழைக்க படுகிறது.

சென்னையில் பல விளையாட்டு அரங்கங்கள் உள்ளன. சென்னையின் பொருளாதாரம் பலதரப்பட்ட தொழில்களைச் சார்ந்தது. ஊர்தி, தகவல் தொழில்நுட்பம், வன்பொருள் தயாரிப்பு, மருத்துவம் போன்ற பல துறைகளைக் கொண்டது. ஊர்தி மற்றும் ஊர்திகளின் உதிரிப்பாகங்கள் உற்பத்தியிலும் நாட்டின் 35 விழுக்காடு பங்கு சென்னைக்கு உண்டு. தகவல் தொழில்நுட்பத் துறையில் நாட்டில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இப்போது சென்னையில் உள்ள சில இடங்களைப் பற்றிப் படிப்போம்.

அண்ணா நகர் கோபுரம்: சென்னையில் உள்ள உயரமான மற்றும் பெரிய பூங்கா கோபுரம். அண்ணாநகர் பூங்காவில் அமைந்துள்ள இந்த கோபுரம் வட்ட வடிவில் சுற்றி சுற்றிச் செல்லும் படிக்கட்டுகளைக் கொண்டுள்ளது. இதன் உச்சியில் இருந்து சென்னையை முழுமையாக கண்டு ரசிக்க முடியும்.

பிர்லா கோளரங்கம்: இந்த நவீன கோளரங்கம் அரை வட்ட வடிவிலான உருண்டையான கட்டிடத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள கருவிகள் மூலம் வானில் உள்ள கோள்களையும் நட்சத்திரங்களையும் காண முடியும்.

கன்னிமாரா பொது நூலகம்: தேசிய நூலகங்களில் ஒன்று. இங்கு ஏராளமான நூல்களும் இதழ்களும் உள்ளன. கம்பூயட்டரில் இயங்கும் தொடுதிரை வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.

அரசு அருங்காட்சியகம்: இந்த அருங்காட்சியகத்தில் தற்கால கலைப் பொருட்கள் முதல் வரலாற்று காலத்துக்கு முற்பட்ட கலைப் பொருட்கள் வரை இடம் பெற்றுள்ளன. இங்கு தென் இந்திய ராஜ பரம்பரைகளின் நினைவுச் சின்னங்கள்  பல உள்ளன. இங்குள்ள பல்வேறு கால வெண்கல மற்றும் இதர உலோக சிற்பங்கள், விலங்கியல் மற்றும் புவியியல் பகுதிகள் பார்வையாளர்களின் கருத்தைக் கவர்வதாக உள்ளன.

எலியட்ஸ் கடற்கரை: தென்சென்னையில் அமைந்துள்ள அழகான சிற்றுலா தலம். இந்த அழகான கடற்கரைக்கு இங்கு அமைந்துள்ள அஷ்டலட்சுமி கோயில் மேலும் பெருமை சேர்க்கிறது. 8 முகங்களுடன் கூடிய லட்சுமி விக்ரகங்கள் தனித்தனிக் கருவறையில் அமைந்துள்ளன. இந்த கடற்கரைப் பகுதியில் ஆரோக்கிய மாதா மடோனாவின் தேவாலயமும் உள்ளது.

செயின்ட் ஜார்ஜ் கோட்டை: சென்னையின் முக்கியமான வரலாற்றுச் சின்னமாக கருதப்படும் இந்த கோட்டை இங்கிலாந்தின் மத குருவான செயின்ட் ஜார்ஜ் பெயரில் அமைந்துள்ளது. இந்த கோட்டை பகுதியில் தற்போது தமிழக சட்டசபை, தலைமைச் செயலகம், தொல்பொருள் துறை அலுவலகங்கள், ராணுவ முகாம்கள் உள்ளன. மெரினா கடற்கரை: அழகான மெரினா கடற்கரையில் நடந்து கொண்டே வங்க கடலையும் அதில் மோதும் அலைகளையும் ரசிக்கலாம். இனிமையான கடற்காற்றை சுவாசிக்கலாம். உலகிலேயே 2வது நீண்ட கடற்கரையாக மெரினா கடற்கரை திகழ்கிறது. இந்த கடற்கரைச் சாலையில் சென்னை பல்கலைக்கழகம், செனட் ஹவுஸ், சேப்பாக்கம் மாளிகை, அரசு கலைக் கல்லூரி, ஐஸ் ஹவுஸ் ஆகியவை அமைந்துள்ளன.

திருக்குறள்

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.                                    (குறள்:34)

மனத்து அளவில் குற்றம் இல்லாதவனாய் ஆகுக; அறம் என்பது அவ்வளவே; பிற வார்த்தை நடிப்பும், வாழ்க்கை வேடங்களுக்கும் மற்றவர் அறியச் செய்யப்படும் ஆடம்பரங்களே.

Spotless be thou in mind! This only merits virtue’s name; All else, mere pomp of idle sound, no real worth can claim.

அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு.                       (குறள்:74)

குடும்பம், உறவு என்பாரிடத்துக் கொள்ளும் அன்பு, உலகத்தவரிடம் எல்லாம் உறவு கொள்ளும் விருப்பை உண்டாக்கும். அதுவே அனைவரையும் நட்பாக்கும் சிறப்பையும் உண்டாக்கும்.

From love fond yearning springs for union sweet of minds; and that the bond of rare excelling friendship binds.

11. தாவரவியல் பூங்கா – உதகமண்டலம்

ஊட்டி என்று அழைக்கப்படும் உதகமண்டலம் நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதியில்  அமைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தின் தலைநகராகவும், சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் இடமாகவும் ஊட்டி விளங்குகிறது.  உதகம் என்றால் தண்ணீர், மண்டலம் என்றால் வட்ட வடிவில் அமைந்துள்ள தண்ணீர். எனவே உதகமண்டலம் என்பது அங்கிருக்கும் ஏராளமான ஏரிகளைக் குறிக்கிறது. நீலகிரி மலைப்பகுதி எல்லோரும் பார்க்க வேண்டிய இடங்களில் மிக முக்கியமான ஒன்று. அதிலும் தாவரவியல் பூங்கா (Botanical Garden) மிக முக்கியமானதாகும்.

பச்சை பசலேன தோற்றமளிக்கும் இந்த தாவரவியல் பூங்காவில் அரிய  வகையான பேப்பர் மரம், குரங்குகள் ஏற முடியாத மரம்,  மில்லியன் ஆண்டுகள் பழமையான மரம் போன்றவைகள் உள்ளன. இத்தாலிய வகைப் பூங்காவில் பல்வேறு வகையான பூக்கள், ஆர்சிட் பூக்கள், பெர்ன் ஹவுஸ் போன்றவைகள் உள்ளன. இங்கு வருடந்தோறும் தமிழ்நாடு தோட்டக்கலைத் துறையால் மே மாதம் மலர்க் கண்காட்சி நடத்தப்படும்.

இந்தப்பூங்கா, கீழ் பகுதியில் உள்ள பூங்கா (Lower Garden), புதிய பூங்கா (New Garden), இத்தாலிய பூங்கா (Italian Garden), பாதுகாக்கப்படும் இடம் (Conservatory),  தண்ணீர் மாடி (Fountain Terrace), சிறிய செடிகளுக்கான பூங்கா  (Nurseries) என மொத்தம் ஆறு பகுதிகளை கொண்டது. இதைத் தவிர வேறு பல பூங்காக்களும் ஊட்டியில் உள்ளன.

ரோஸ் பூங்கா  நூறாவது மலர்க் கண்காட்சியின் நினைவாக உருவாக்கப்பட்டது. இது மொத்தம் 4 ஏக்கர் பரப்பளவில் ஊட்டியில் உள்ள விஜயநகரம் என்னுமிடத்தில் , எல்க் மலையில் அமைந்துள்ளது. இங்கு முதன் முதலில் 1919 வகையான ரோஸ் மலர்கள் நடப்பட்டன. பின்னர் மேலும் பல மலர்கள் சேர்க்கப்பட்டு தற்போது 2241 வகையான மலர்கள் உள்ளன. இங்கு உள்ள நில மாடம் என்னுமிடத்தில் இருந்து, மொத்த பூங்காவையும் கண்டு களிக்கலாம். ஏரிப் பூங்கா ஊட்டியின் பிரதான ஏரியில் அமைந்துள்ளது. இது ஊட்டி ரயில் நிலையத்துக்கு மிக அருகில் அமைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வரவேற்பைப் பெற்று ஊட்டியின் மிக முக்கிய சுற்றுலாத் தளமாக விளங்குகிறது. இந்த ஏரிப் பூங்கா, மாலை நேரங்களில் இயற்கையின் அழகை ரசிக்க உகந்த இடம். மேலும் 1978ஆம் ஆண்டு கண்ணாடியால் ஆன பூங்கா ஒன்றும் இங்கு உருவாக்கப்பட்டது. ஏரியைச் சுற்றி யூகலிப்டஸ் மரங்களும், சிறுவர் பூங்காவும், சிறுவர் ரயிலும் உள்ளது.

மான் பூங்கா, ஏரி பூங்காவின் அருகில் அமைந்துள்ளது. இந்தியாவில் மிக உயரத்தில் அமைந்திருக்கும் பல பூங்காக்களில் இந்த பூங்காவும் ஒன்று. ஊட்டியின் அருமையான வானிலையில் வனவிலங்குகளைக் காண இந்த பூங்கா பெரிதும் உதவியாய் இருக்கிறது. தமிழக வனத்துறையால் பராமரிக்கப்பட்டு வரும் இந்தப் பூங்கா ஊட்டியில் இருக்கும் சில முக்கியமான சுற்றுலாத் தளங்களில் ஒன்று.

ஊட்டியில் மேலும் பார்க்க வேண்டிய பல இடங்கள் உள்ளன. அவற்றுள் முக்கியமானது, படகு இல்லம், அருங்காட்சியகம்,   தொட்டபெட்டா சிகரம், பைகாரா நீர்வீழ்ச்சி.  எல்லாவற்றிற்கும் மேலாக நீலகிரி மலை ரயில் பயணம் மிகவும் அழகான ஊட்டியின் இயற்கை வளத்தைக் காண உதவும்.

திருக்குறள்

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.                               (குறள்:788)

பலர் முன்னே ஆடை நழுவும்போது உடனே சென்று உதவும் கை போல, நண்பனுக்குத் துன்பம் வந்த போது உடனே சென்று போக்குவதே நட்பு.

(True) friendship hastens to the rescue of the afflicted (as readily) as the hand of one whose garment is loosened (before an assembly).

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.                                (குறள்:50)

மனைவியுடன் வாழும் வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்பவன், பூமியில் வாழ்ந்தாலும், வானத்துள் வாழும் தேவருள் ஒருவனாகவே மதிக்கப்படுவான்.

He who on earth has lived in the conjugal state as he should live, will be placed among the Gods who dwell in heaven.