23. முக்கடலின் முனையில் குமரி

கன்யாகுமரி, இந்து மகா சமுத்திரம், வங்காள விரிகுடா, அரபிக்கடல் ஆகிய மூன்று கடல்கள் சேருமிடத்தில் இடத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள கடற்கரை பகுதியுடன் கூடிய மண்பரப்பு, பல நிறமுடைய மண்வெளிகளைக் கொண்டது. சூரிய உதயம், அஸ்தமனம் ஆகிய இரண்டையும்  கன்யாகுமரியின்  கடற்கரையிலிருந்து  பார்க்கலாம் இச்சூரியக் காட்சிகள் இவ்வூரின் நினைவு கூறத்தக்க அனுபவங்களாகும்.

இவ்வூருக்கு, கன்யாகுமரி என்ற பெயர் இப்பகுதியில் புகழ்பெற்ற கன்யாகுமாரி அம்மன் கோவில் அமைந்திருப்பதால் கிடைத்துள்ளது. கன்யாகுமாரி, சிவனுக்காக தவம் செய்து, கன்னியாக கோவில் கொண்டுள்ள இடம்.  இது பார்வதி தேவி தன்னுடைய ஒரு அவதாரத்தில் ‘குமரிப் பகவதி’ என்னும் பெயருடன் சிவனை சேர விரும்பினாள். அதன் பொருட்டு இந்நிலப் பகுதியின் தென்கோடியில் அமைந்துள்ள ஒரு பாறையில் தவம் செய்தாள் என்று கூறப்படுகிறது.

இந்தக் கோவிலின் குமரி அம்மன் அணிந்துள்ள வைர மூக்குத்தியின் ஒளி கடலில் பிரதிபலிக்குமாம். இந்த ஒளியைக் கொண்டுதான் ஆங்கிலேயர் கன்யாகுமரியைக் கண்டு பிடித்தார்கள் என்று ஒரு கதையும் உண்டு.

சுவாமி விவேகானந்தர் கன்யாகுமரிக்கு வந்திருந்த போது கடலுக்குள் அமைந்திருக்கும் இந்தப் பாறைக்கு நீந்திச் சென்று, மூன்று நாட்கள் தியானம் செய்திருக்கிறார். அவரது நினைவாக இந்தப் பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் ஒன்று கட்டப்பட்டுள்ளது.  இந்தப் பாறைக்கு விவேகனந்தர் பாறை என்ற பெயரும் உண்டு.

இங்கு திருவள்ளுவர் சிலை விவேகனந்தர் பாறைக்கு அடுத்து நிறுவப்பட்டுள்ளது. இது கன்யாகுமரியின் முக்கிய அடையாளங்களின் ஒன்று. கன்யாகுமரியில், திருவள்ளுவரின் புகழைப் பறைசாற்றும் விதமாக அவருக்கென்று ஒரு பிரம்மாண்டமான இச்சிலை தமிழக அரசால் நிறுவப்பட்டுள்ளது. 133 அடி உயரமுள்ள இச்சிலை, 30 அடி உயரமுள்ள பாறை மீது அமைந்துள்ளது. இதனை அமைக்க 10 ஆண்டுகள் தேவைப்பட்டது. மேலும், சிலையின் உட்புறச் சுவற்றில் ஒவ்வொரு அதிகாரத்திலிருந்து ஒரு குறள் வீதம் 133 குறட்பாக்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது.
 

காந்தி மண்டபம் கன்யாகுமரியில் மகாத்மா காந்தியின் சாம்பல் (அஸ்தி) வைக்கப்பட்ட இடத்தில் கட்டப்பட்டுள்ள மண்டபமாகும். இம்மண்டபத்தில் உள்ள மையக்கூண்டு  79 மீட்டர் உயரம் கொண்டது. இது காந்தியின் வயதைக் குறிப்பிடுவதாக உள்ளது. ஒவ்வொரு வருடமும் காந்தியடிகள் பிறந்த தினமாகிய அக்டோபர் 2ம் தேதி சூரிய கதிர்கள் காந்தியின் சாம்பல் வைத்திருக்கும் இடத்தில் விழும்படியாக அமைக்கப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தில் ஒன்பதாம் நூற்றாண்டுக்கும் முந்தைய பல வரலாற்றுச் சின்னங்களும் அமைந்திருப்பதால் சுற்றுலா பயணிகளுக்கு இது ஈர்க்கும் ஒரு இடமாகத் திகழ்கிறது. குமரி மாவட்டம் கைவினைப் பொருட்களுக்கு பெயர் போன மாவட்டமாகும். குறிப்பாக தோல் நீக்கப்படாத தேங்காயில் செய்யப்படும் குரங்கு பொம்மைகள், தேங்காய் ஓடு மற்றும் மரத்தால் செய்யப்படும் கைவினைப் பொருட்கள் ஆகியன முக்கியமானவை. சங்கு, பனை ஓலையினாலான கைவினைப்பொருட்கள் சிறப்பு வாய்ந்தவை.

விவேகானந்தா கேந்திரா, குகநாத சாமி கோவில், சிவன் வல்லக்கோட்டை, சுசீந்திரம், நாகர்கோவில், உதயகிரி துறைமுகம், பத்மநாபபுரம், பேச்சிப்பாறை அணை, அரசு பழதோட்டம், திருவரூர், திருநந்திக்கரை, முட்டம், ஆகியவை இம்மாவட்டத்தின் காணந்தகுந்த இடங்கள்.

திருக்குறள்

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.                    (குறள்:504)

ஒருவனின் குணங்களை ஆராய்ந்து அவனிடம் இருக்கும் குற்றங்களையும் ஆராய்ந்து இரண்டிலும் எவை அதிகமாக இருக்கின்றன என்பதையும் ஆராய்ந்து குணங்களின் மிகுதியைக் கொண்டே அவனைப் பதவிக்குத் தெரிவு செய்யவேண்டும்.

Let (a king) consider (a man’s) good qualities, as well as his faults, and then judge (of his character) by that which prevails.

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.                           (குறள்:1031)

உழவுத் தொழிலில் இருக்கும் நெருக்கடிகளை எண்ணி, வேறு வேறு தொழிலுக்குச் சென்றாலும் உலகம் ஏரின் பின்தான் இயங்குகிறது. அதனால் எத்தனை வருத்தம் இருந்தாலும் உழவுத் தொழிலே முதன்மையானது.

Agriculture, though laborious, is the most excellent (form of labor); for people, though they go about (in search of various employments), have at last to resort to the farmer.

19. கோயம்புத்தூர் மாவட்டம்

கோயம்புத்தூர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையின், மழை சாரல் மிகுந்த பகுதியில் அமைந்துள்ளது. இதனால் இங்கு மனதிற்கு இதம் அளிக்கின்ற காலநிலை வருடம் முழுவதும் நிலவுகிறது. இருபத்தி ஐந்து கிலோ மீட்டர் நீளமுள்ள பாலக்காட்டு கணவாய் வழியாக வீசும் குளிர்ந்த காற்று இதன் பருவ நிலைக்கு காரணமாக அமைகிறது.

இங்கு அதிகமாக உள்ள கரிசல் மண் இந்த பகுதியில் விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழில்கள் சிறந்து விளங்க ஒரு காரணமாக இருக்கிறது. மேலும் இங்கு வெற்றிகரமாக விளங்கும் பருத்தி விளைச்சல், நெசவு தொழிற்சாலைகளுக்கு சிறந்த அடித்தளத்தை அமைக்க வழி செய்துள்ளது.

கோவை மாநகர் தமிழகத்தின் மூன்றாவது பெரிய நகரமாகும். தமிழ் நாட்டில் ஒரு சிறந்த தொழில் வளர்ச்சி அடைந்த நகரம் ஆகும். இது தென்னிந்தியாவின் நெசவுத் தொழிலின் தலைநகரம் என்றழைக்கப்படுகிறது. இந்நகரம்,நொய்யலாற்றின் கரையில் அமைந்துள்ளது.

கோவை நகர மக்களின் முக்கிய குடிநீர் தேவையை சிறுவாணி நீர்தான் தீர்த்து வைக்கிறது. உலகில் இரண்டாவது மிக சுவையான குடிநீர் என சிறுவாணி நீர் புகழப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் நீர் அனைத்தும் ஒன்று சேர்ந்து சிறுவாணி மலை அடிவாரத்தில் அருவியாக கொட்டுகிறது. பச்சை பசேல் என்ற மரங்களின் நடுவே குளிர்ந்த நீராக கொட்டும் இதை கோவை குற்றாலம் என அழைக்கின்றனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள  பொள்ளாச்சி, சந்தைகளின் சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது. பொள்ளாச்சியின் வெல்லச் சந்தைதான் ஆசியாவிலேயே மிகப் பெரிய வெல்லச் சந்தையாகும். இங்கு உள்ள காய்கறிச் சந்தை, கேரளாவின் மத்தியப் பகுதிகளுக்கு, காய்கறி விநியோகம் செய்யும் பெரிய சந்தைகளுள் ஒன்றாக விளங்குகிறது. அதே போல், தென்னிந்தியாவின் மிகப்பெரும் இரும்பு மற்றும் கால்நடைச் சந்தைகள் இங்கு அமையப்பெற்றுள்ளன.

அதேபோல் இவ்மாவட்டத்தில் அமைந்துள்ள திருப்பூர் நெசவாலைகளின் நகரம் ஆகும். இங்கு உற்பத்தியாகும் துணி வகைகள் நாட்டின் பல்வேறு நகரங்களின் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. பல்வேறு நகரங்களிலிருந்து பல மக்கள் இங்குள்ள பல்வேறு துணி உற்பத்தி ஆலைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரிவதற்காகக் குடியேறியுள்ளனர்.

வால்பாறை தமிழகத்தின் மிக அழகிய மலைப்பிரதேசங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. அடர்ந்த காடுகள், காட்டு அருவிகள் மற்றும் மெல்லிய ஓசையெழுப்பும் ஓடைகளுடன் தேனீர் மற்றும் காப்பி தோட்டங்களும் இந்த மலைப்பிரதேசத்தில் காணப்படுகின்றன. மழைப்பொழிவு மற்றும் புல்நிறைந்த மலைகளின் காரணமாக ‘தென்னிந்தியாவின் சீராப்புஞ்சி’ என்று வால்பாறை அழைக்கப்படுகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க பிற இடங்கள் விவசாய பல்கலைக் கழகம், மணிக்கூண்டு, மருதமலை.

திருக்குறள்

எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.                    (குறள்:666)

ஒன்றைச் செய்ய எண்ணியவர் அதைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற மனஉறுதியை உடையவராக இருந்தால், அடைய நினைத்தவற்றை எல்லாம் அவர் எண்ணப்படியே அடைவார்.

If those who have planned (an undertaking) possess firmness (in executing it) they will obtain what they have desired even as they have desired it.

கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.                       (குறள்:772)

காட்டில் அஞ்சி ஓடும் முயலைக் கொன்ற அம்பைப் பிடித்திருப்பதை விட, எதிர்த்து வரும் யானையின் மீது பட்டும், அதை வீழ்த்தாத வேலைப் பிடித்திருப்பது நல்லது.

It is more pleasant to hold the dart that has missed an elephant than that which has hit hare in the forest.

15. தமிழகத்தின் நெற்களஞ்சியம் – தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம் விவசாயத்திற்கு பெயர் பெற்றதாகும். காவிரி நதியால் நெற்பயிர்களும், தென்னை மரங்களும், மாந்தோப்புகளும் செழித்து வளர்கின்றன.  தஞ்சை என்பதற்கு “குளிர்ந்த வயல்கள் நிறைந்த பகுதி” என்று பொருள். நெல் விளைச்சலில் தஞ்சாவூர் முதன்மையாக விளங்குவதால் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது.

தமிழகத்தின் பதிமூன்று கடற்கரை மாவட்டங்களில் தஞ்சாவூரும் ஒன்றாகும். தஞ்சாவூர் நெல் உற்பத்தியில் மட்டுமல்லாது தமிழகத்தின் மீன் பிடி தொழிலில் 5 சதவீதம் தஞ்சாவூரில் நடைபெறுகிறது.

தஞ்சாவூர், கலை, பண்பாடு மற்றும் பாரம்பரியத்திலும் சிறந்து விளங்குகிறது. இது, 1987ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. இன்று தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்குகிறது.

சோழப்பேரரசின் மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டடக் கலையில் தமிழருடைய சாதனையாக பிரகதீசுவரர் கோவிலைக் கட்டினான். அதனை தஞ்சை பெரிய கோவில் என்றும் அழைப்பார்கள் . இக்கோயிலின் கட்டிடக்கலை, சோழர்காலக் கட்டிடக்கலைக்கு நல்லதொரு எடுத்துக்காட்டாகக் கருதப்படுகிறது. கட்டுமான கற்கோவில் அமைப்புகளில், இந்தியாவிலேயே மிகப்பெரியது தஞ்சை பெரிய கோவில்.

கருவறையில் உள்ள சிவலிங்கம் உலகிலேயே பெரிய சிவலிங்கமாகும். 6 அடி உயரம், 54 அடி சுற்றளவு கொண்ட ஆவுடையார், 23 அரை அடி உயரம் கொண்ட லிங்கம் ஆகியன தனித்தனியாக கருங்கற்களால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது.  தஞ்சைப் பெரியகோவிலில் உள்ள பெரிய நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது. இதன் உயரம் 14 மீ, நீளம் 7 மீ, அகலம் 3 மீ ஆகும். நந்தி மண்டபம் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தஞ்சை சரசுவதி மகால் நூலகம் உலகில் உள்ள பழமையான நூலகங்களில் சிறப்பான ஒன்றாகக் கருதப்படுகின்றது. சோழர்கள் காலத்தில் தோன்றி, அவர்கள் பணியால் வளர்ச்சி யடைந்து, இன்று பன்மொழிச் சுவடிகளும், காகிதத்தில் எழுதிய நூல்களும், ஓவியங்களும் கொண்ட நூலகமாகத் திகழ்கின்றது.

அடுத்து தஞ்சாவூர் என்றதும் அனைவரது ஞாபகத்திற்கும் வருவது தலையாட்டி பொம்மை. காற்றில் பொம்மை ஆடுவது பார்ப்பதற்கு ரம்மியமாக இருக்கும். தஞ்சாவூர் வரும் அனைவரும் இந்த பொம்மையை வாங்காமல் செல்வதில்லை.

 தஞ்சாவூர் ஓவியங்கள் மிகப் பிரபலமானவை. இந்து கடவுள்கள், ராமாயண, மகாபாரதம் போன்ற இதிகாச காட்சிகள் ஆகியவையே ஓவியத்தின் முக்கிய கரு பொருளாக இருக்கும். இந்த ஓவியக் கலை விலை மதிப்பற்ற கலையாக கருதப்படுகிறது. ஓவியங்கள் பெரும்பாலும் தங்க நிறத்தில் ஜொலிக்கும்.

தஞ்சாவூர் பழங்கால ஓவியங்கள், வெண்கலத்தால் செய்யப்பட்ட கைவினை பொருட்களுக்கு புகழ் பெற்றதாகும். இங்கு பலாமரத்தில் செய்யப்படும் வீணை, தம்புரா போன்ற இசைக்கருவிகள் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் உபயோகிக்கப் படுகிறது.

தமிழர்களுக்கு காபி என்றாலே தஞ்சாவூரின் அருகில் உள்ள கும்பகோணம் டிகிரி காபி நினைவில் வந்து நாவில் நீர் ஊற செய்யும். காபி கொட்டைகளை அரைத்து தாமிரத்தால் ஆன பில்டர்களில் வடிகட்டி டிகாஷன் தயாரித்து சுத்தமான பசும்பால் கலந்து காபி தயாரிக்கப்படுகிறது. தாமிரத்தால் ஆன பில்டர்களை பயன்படுத்துவதால் சுவை கூடுகிறது என்கிறார்கள்.

திருக்குறள்

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.                           (குறள்:121)

அடக்கம் ஒருவனைப் பிற்காலத்தில் தேவர் உலகிற்குக் கொண்டு சேர்க்கும்; அடங்காமல் வாழ்வதோ அவனை நிறைந்த இருளுக்குக் கொண்டு போகும்.

Self-control will place (a man) among the Gods; the want of it will drive (him) into the thickest darkness (of hell).

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.                          (குறள்:215)

உலகின் வளர்ச்சிப் போக்கை அறிந்து செயற்படும் பேர் அறிவாளனின் செல்வம்,  நீர் நிறைந்த ஊருணி எல்லார்க்கும் பொதுவாவது போல் பொதுவாகும்.

The wealth of that man of eminent knowledge who desires to exercise the benevolence approved of by the world, is like the full waters of a city-tank.

09. தென்னாட்டின் தூங்கா நகரம்

மதுரை பல்வேறு அரசாட்சியின் கீழ் இருந்தாலும், பாண்டியர்கள் மற்றும் நாயக்கர்கள் காலம் தான் மதுரைக்குப் பொற்காலமாக இருந்திருக்கிறது. பாண்டியர் காலத்தில் மதுரையில்  சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த பெருமை அவர்களுக்கு உண்டு.

மதுரை என்றாலே மல்லிகைப்பூவும், மீனாட்சி அம்மனும் தான் நினைவுக்கு வரும். மதுரைக்காரர்கள் விருந்தோம்பலில் பெருமை கொள்பவர்கள்.  அறிமுகம் இல்லாதவர்களாக இருந்தாலும் கேட்காமலேயே உதவிக்கு வருபவர்கள்.

ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாக தேர்வு செய்யப்படவிருந்த கோவில் எது தெரியுமா?  மதுரை மாநகரில் அமைந்துள்ள அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவில். இக்கோவிலின் மூலவர் சுந்தரேஸ்வரர் ஆவார். இருந்தாலும்  அம்மனுக்கு முக்கியத்துவம் கொடுத்து மீனாட்சி  கோவில் என்று அழைப்பது இவ்வூரின் சிறப்பு.  இந்தக் கோவில் 1600 ஆண்டு கால பழமை வாய்ந்தது. 

மதுரை மாநகரத்தின் மத்தியில் அமைந்துள்ள இந்தக்கோவிலுக்கு மொத்தம் நான்கு நுழைவாயில்கள் உள்ளன. மதுரை மீனாட்சியம்மன் கோயிலை மையமாக வைத்து அதனைச் சுற்றி வீதிகள் அமைந்துள்ளன.

மீனாட்சியம்மன் கோயிலுக்குள் இருக்கும் வீதிகளுக்கு ஆடி வீதி என்று பெயர். அதைத் தாண்டி கோயிலுக்கு வெளியில் சித்திரை வீதிகள், சித்திரை வீதிகளுக்கு அடுத்த வீதிகள் ஆவணி வீதிகள்,  அதனைத் தாண்டி வெளியே வந்தால் மாசி வீதிகள். அதையும் தாண்டி வெளி வீதிகள் என மதுரை நகர் அமைக்கப்பட்டுள்ளது.

திருமலை நாயக்கர் மஹால் பதினேழாம்  நூற்றாண்டில் மதுரையை ஆண்ட நாயக்கர் மன்னரால் கட்டப்பட்டது. மஹால் உள்ளே செல்லும்போது, 3700 சதுர கி.மீ பரப்பளவுடன் கூடிய மஹாலின் மத்தியில் அமைந்துள்ள மைதானம் போன்ற அமைப்பைக் காண முடியும்.  அதை சுற்றிலும் வட்ட வடிவில் பிரமாண்டமான தூண்கள் மஹாலைத் தூக்கி நிறுத்துகின்றன.  இந்த மஹால் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று சொர்க்க விலாசம் மற்றொன்று ரங்க விலாசம். இதில் சொர்க்க விலாசம் அரசவையாக பயன்படுத்தப்பட்டது.

வைகை நதி, மதுரை மாவட்டத்தின் விவசாயத்துக்குத் தேவையான நீரையும் மதுரைக்கு தேவையான குடிநீரையும் வழங்கி வருகிறது. மதுரையில் கொண்டாடப்படும் சித்திரைத் திருவிழாவின் போது கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் உற்சவம் மிகவும் கோலாகலமாக நடக்கும்.

மதுரையின் சிறப்பு, மணக்கும் மல்லிகையும், அதனைத் தொடுக்கின்ற அழகும் தான். மதுரை மல்லிகை பல்வேறு வகையில் பயன்படுத்தப் படுகிறது. மாலைகள்,  பூச்செண்டுகள், பெண்களின் கூந்தலை அழகு பெறச் செய்வது இப்படி பலப் பல. இது மதுரை மக்களால் பயிரிடப் படுகின்றது. கிட்டத் தட்ட எண்பது வகை மல்லிகைகள் இருந்த போதும், மூன்று வகைகளே அதிகமாகப் பயிரிடப் படுகின்றன.

ஒரு காலத்தில் ஆசியாவிலேயே பெரிய திரையரங்கு  என்று புகழப் பட்ட தங்கம் திரையரங்கு  இங்கு தான் இருந்தது. மதுரை, தமிழகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இதனால் பயணிகளின் போக்குவரத்தும் வியாபரமும் 24 மணி நேரமும் மதுரையில் நடப்பதால் இந்த நகரம் தமிழகத்தின் தூங்கா நகரம் (City that never sleeps)  என்று அழைக்கப் படுகிறது.

திருக்குறள்

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.                        (குறள்:102)

நமக்கு நெருக்கடியான நேரத்தில் ஒருவர் செய்த உதவி, அளவில் சிறியது என்றாலும், உதவிய நேரத்தை எண்ண அது இந்தப் பூமியை விட மிகப் பெரியதாகும்.

A favour conferred in the time of need, though it be small (in itself), is (in value) much larger than the world.

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.                  (குறள்:127)

எதைக் காக்க முடியாதவரானாலும் நா ஒன்றையாவது காத்துக் கொள்ள வேண்டும். முடியாது போனால் சொல்குற்றத்தில் சிக்கித் துன்பப்படுவர்.

Whatever besides you leave unguarded, guard your tongue; otherwise errors of speech and the consequent misery will ensue.

01. இந்தியாவின் தலைநகர் புதுடெல்லி

டில்லி’ அல்லது ‘டெல்லி’ என்று அழைக்கப்படும் நகரமும் அதனை சுற்றியுள்ள பகுதிகளும் அதிகாரப்பூர்வமாக இந்தியாவின் என்.சி.டி (NCT – NATIONAL CAPITAL TERRITORY) எனப்படும் ‘தேசிய தலைநகர பிரதேசம்’ ஆகும். இந்தியாவின் தலைநகரமான புதுடெல்லி நகரம் இந்த NCT-யின் அங்கமாக உள்ளது.

டெல்லி நகரமானது புது டெல்லி மற்றும் பழைய டெல்லி என்ற இரண்டு நகர்ப்பகுதிகளைக் கொண்டுள்ளது. வரலாற்று அடையாளங்களையும், அசர வைக்கும் அதி நவீன அம்சங்களையும் தனது தனித்தன்மையாக் கொண்டு காட்சியளிக்கிறது.

கிழக்கில் உத்தரப்பிரதேச மாநிலத்தையும், தெற்கு, மேற்கு, வடக்கு பகுதிகளில் ஹரியாணா மாநிலத்தையும் இது எல்லைகளாகக் கொண்டுள்ளது. டெல்லி மலைத்தொடர்கள் மற்றும் யமுனை நதி படுகைப்பகுதி ஆகிய இரண்டும் டெல்லி நகரத்தின் முக்கிய இயற்கை அம்சங்கள்.

டெல்லியின் செங்கோட்டை (லால் கிலா) டெல்லியின் அடையாளமாகத் திகழும் வரலாற்றுச் சின்னம். பாரம்பரியக் கலைச் சின்னமாக வீற்றிருக்கும் இந்தச் செங்கோட்டையில் இந்தியப்பிரதமர் ஒவ்வொரு வருடமும் சுதந்திர தினத்தன்று இந்தியத் தேசியக்கொடியை ஏற்றுகிறார்.

குதுப் வளாகத்தில் உள்ளது குதுப் மினார் கோபுரம். இந்த அற்புதமான கோபுர அமைப்பு இந்தியாவிலேயே மிக உயரமான மினாரெட் கோபுரமாகும். இதன் உயரம் 72.5 மீ (ஏறக்குறைய 239 அடி!).

 உயரத்தில் வெகு சிக்கலான கட்டிடக்கலை அமைப்புடன், நுணுக்கமான அலங்கார வேலைப்பாடுகளையும் கொண்டுள்ளது. குத்புதீன் ஐபெக் மன்னரால் தனது வெற்றிச்சின்னமாக இந்த கோபுர அமைப்பு கட்டப் பட்டது.

பாராளுமன்றம் எனப்படும் மக்களவை கூடம், மஹாத்மா காந்தி தகனம் செய்யப்பட்ட ராஜ்காட், லோட்டஸ் டெம்பிள் எனும் தாமரைக் கோவில், மற்றும் இந்தியா கேட் போன்றவை  டெல்லியில் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்களாகும்.

இந்தியாவின் கௌரவச்சின்னமாக இந்த ராஷ்டிரபதி பவன் எனப்படும் குடியரசுத்தலைவர் மாளிகை விளங்குகிறது. தனித்தன்மையான கட்டிடக்கலை அம்சங்களோடு காட்சியளிக்கிறது.

இந்தப் பெருநகரம், வரலாற்று கால இந்தியாவில் பல ராஜவம்சங்களின் தலைநகரமாக விளங்கியது.  இன்றும் வரலாற்று அடையாளங்கள் அழியாமல் காட்சியளிக்கிறது.

இந்த மாநகரத்தின் கதம்ப கலாச்சாரம் இதன் தனித்தன்மையாகும். தீபாவளி, மஹாவீர் ஜயந்தி, ஹோலி, லோரி, கிருஷ்ண ஜயந்தி, குரு நானக் ஜயந்தி போன்ற திருவிழாக்கள் இந்த மாநகரத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. இவை தவிர குதுப் திருவிழா, வசந்த் பஞ்சமி மற்றும் சர்வதேச புத்தக சந்தை, சர்வதேச மாம்பழ சந்தை போன்றவையும் குறிப்பிடத்தக்கவை.

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.                                (குறள்:2)

தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?

What Profit have those derived from learning, who worship not the good feet of Him who is possessed of pure knowledge?

25. மலைகளின் இளவரசி

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல்,  தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது.  பெரிய பரப்பளவில், அதிக அடர்த்தியாகவும், நிறைய வனவிலங்குகளுக்கு வீடாகவும், பச்சை வர்ண, பட்டு உடுத்திய அழகு தேவதை போல இருப்பதால் இதற்கு மலைகளின் இளவரசி என்று பெயர்.

இந்த அழகிய மழைப் பிரதேசத்தின் உண்மையான பெயர் கொடிக்கானல் ஆகும். இன்னும் சொல்லப்போனால் கொடிகளால் சூழப்பட்ட காட்டுப் பகுதி என்பதுதான் இதன் அர்த்தம்.

மதுரையை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்த வெள்ளையர்கள், கோடை காலங்களில் வெப்பம் தாங்க முடியாமல் கஷ்டப்பட்டார்கள். அதனால் தங்களுக்கு ஏற்ற தட்பவெப்பநிலை உடைய இடம் தேடி அலைந்தனர். அப்போது, பி.எஸ். வார்ட் (B.S.Ward) என்கிற பிரிட்டிஷ் சர்வேயர் (Surveyor) ஒருவர் பெரியகுளம் என்ற ஊரின் வழியாக தன் குதிரையில் பயணம் செய்தார்.  அப்போது ஒரு மலை பகுதியை பார்த்த அவர் தன் குதிரையுடன் மலையின் மேலே போனார். அந்த இடம் மிகவும் குளுமையாகவும், இதமாகவும், பச்சை பசேலென அழகாகவும் இருந்ததனால் அங்கே வெள்ளையர்கள் தங்க சரியான வெப்பநிலையுடைய பகுதி அது என்று அறிந்துகொண்டு அங்கே தனக்கென கூடாரம் அமைத்துத் தங்கினார்.

இங்கே உள்ள கொடைக்கானல் ஏரி சுற்றுலாப் பயணிகள் காணவேண்டிய இடங்களில் முக்கியமானதாகும். இந்த ஏரி 1863 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. மொத்தம் 60 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரியில் பயணிகள் உல்லாசமாக படகுப் பயணம் செய்ய சுற்றுலாத் துறையின் படகுகள் உள்ளன.

இந்த ஏரியின் அருகே உள்ள மிதிவண்டிகள், குதிரைகள் ஆகியவற்றை சுற்றுலா செல்வோர் வாடகைக்கு எடுத்து ஏரியைச் சுற்றி பயணிக்கலாம்.

மொத்தம் 20.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ப்ரயண்ட்பூங்காவை உருவாக்கியவர், எச்.டி.ப்ரயண்ட். இதை அவர் 1908 ஆம் ஆண்டு உருவாக்கினார். இந்த பூங்காவில் ஏறக்குறைய 325 வகையான மரங்கள், 740 வகையான ரோஜா மலர்கள் உள்ளன. 150 வயதுடைய போதி மரமும், யூகலிப்டஸ் மரமும் இங்கு இருப்பது இந்த பூங்காவின் சிறப்பம்சமாகும். மே மாதம் இங்கு தோட்டக்கலைத் துறையின் கண்காட்சியும், மலர்க் கண்காட்சியும் நடைபெறும்.

தலையர் நீர்வீழ்ச்சி கொடைக்கானல் காட் ரோட்டில் உள்ளது. இதனை எலி வால் நீர்வீழ்ச்சி என்றும் அழைக்கின்றனர். இந்தியாவின் மிக உயரமான நீர்வீழ்ச்சிகளில் இதுவும் ஒன்று.

இங்கு மொத்தம் மூன்று தூண்பாறைகள் 122 மீ உயரத்தில் தூண் போல காட்சியளிக்கின்றன. பல நேரங்களில் இந்த பாறைகள் மேகங்களால் மூடியே இருக்கும்.

குறிஞ்சி ஆண்டவர் கோவில்  1934 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் இருந்து இங்கு வந்த லீலாவதி என்பவரால் கட்டப்பட்டது இந்தக் கோவில். இந்தக் கோவிலின் முக்கிய கடவுள் குறிஞ்சி ஆண்டவர் என்றழைக்கப்படும் முருகன். பன்னிரண்டு  வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூவை இங்கு பார்க்கலாம்.

கோக்கர்ஸ் வாக், டால்பின் மூக்கு, தற்கொலைப் பள்ளத்தாக்கு, பிசாசின் சமையலறை (Devil’s kitchen) , ஊசியிலை காடு , பியர் சோழா அருவி (Bear shola Falls) , கொடைக்கானல் வானிலை ஆய்வுக்கூடம் என கொடைக்கானலுக்கு செல்பவர்கள் தவறாமல் பார்க்கும் இடங்கள் நிறைய உள்ளது.

சென்னையிலிருந்து கொடைக்கானல் செல்பவர்கள் கொடைக்கானல் ரோடு என்ற புகைவண்டி நிலையத்தில் இறங்கி அம்மையநாயக்கானூர், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு வழியாக இயற்கைக் காட்சிகளை ரசித்துக் கொண்டே கொடைக்கானலைச் சென்றடைவார்கள்.

திருக்குறள்

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு.                          
      (குறள்: 436)

படிக்காதவர் முதலில் தன் குற்றத்தைக் கண்டு விலக்கிப் பிறகு அடுத்தவர் குற்றத்தைக் காணும் ஆற்றல் மிக்க அரசிற்குக் குற்றம் ஏதும் வராது!

What fault will remain in the king who has put away his own evils, and looks after the evils of others.

அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்.                                  
(குறள்: 483)

செயலைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற திறமைகளுடனும் தந்திரங்களுடனும், உரிய காலத்தைக் கண்டு ஒரு செயலைச் செய்தால் செய்வதற்கு அரிய செயல் என்று ஏதேனும் உண்டா?.

Is there anything difficult for him to do, who acts, with (the right) instruments at the right time?

19. திருச்சிராப்பள்ளி

திருச்சிராப்பள்ளி என்ற திருச்சி, காவிரிக்கரையில் அமைந்த பழமையான நகரம். இங்கு கோயில் கட்டடக்கலையும், எழில் நிறைந்த கோபுரங்களும், சிற்பங்களும், இயற்கை வனப்பும் நிறைந்துள்ளன. திருச்சி மாநகரம் மலை கோட்டையைச் சுற்றி அமைந்துள்ளது. மலை கோட்டையைத் தவிர தேவாலயங்கள், கல்லூரிகள், மற்றும் சமுதாய நல அமைப்புகள் பல உள்ளன. சிறந்த உட்கட்டமைப்பு கொண்ட நகரமான திருச்சி, தமிழகத்தின் முக்கிய நகரமாக விளங்குகிறது.

திருச்சியின் மிக முக்கிய சுற்றுலாத் தலமாக மலைக்கோட்டைக் கோயில் விளங்குகிறது.  83 மீட்டர் உயரத்தில் இந்த கோட்டை அமைந்துள்ளது. இதனால் திருச்சி, மலை நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. மலை மீது ஏறி செல்லும் வழியில் தாயுமானசுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் நூற்று கால் மண்டபம் உள்ளது. கோயிலின் விமானம் தங்கத்தால் வேயப்பட்டுள்ளது. இந்த மலையின் மீது உச்சிப் பிள்ளையார் கோயில் உள்ளது. இந்த கோயில் நாயக்கமன்னர்களின் ராணுவ அரணாகவும் விளங்கியது. பல்லவர்கள் ஆட்சியின் போது இந்த மலையைக் குடைந்து குகைக் கோயில்களை அமைத்தனர். இந்த மலைகோயில் தற்போது சத்திரம் என அழைக்கப்படும் பரபரப்பான வர்த்தக இடமாக மாறிவிட்டது.

புகழ் பெற்ற வைணவ தலமான, ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில் திருச்சி நகரில் இருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கோயிலின் வடக்குப் பகுதி தென்னை மரங்களால் சூழப்பட்டுள்ளது. இந்த கோயில் காவிரி நதியின் நடுவே 2.5 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. உலகின் பிரம்மாண்டமான கோயில்களில் இதுவும் ஒன்றாகும். இந்த கோயிலின் ராஜகோபுரம் இந்தியாவிலேயே மிக பெரியதாகும். ஸ்ரீரங்கம், திருச்சி நகருடன் பாலம் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் ராணி மங்கம்மாள் அரண்மனையில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. திருச்சியின் அருகே உள்ள கீரனூர் கிராமத்தில் அமைந்துள்ள ரயில்வே தொங்குபாலம், தென்னிந்தியாவின் முதல் தொங்குபாலமாகும். மலைகளைக் குடைந்து அமைக்கப்பட்டது இதன் சிறப்பு அம்சமாகும். பாலத்துக்கு நடுவில் தண்ணீர் செல்லும் வசதியும், அதற்கு மேல் வாகனங்கள் செல்லும் வசதியும் கொண்ட மூன்றடுக்கு வடிவம் கொண்டது.

காவிரியின் குறுக்கே உள்ள பழங்கால அணை கல்லணை ஆகும். முதலாம் நூற்றாண்டில் கரிகாலசோழனால் கட்டப்பட்டது. நகரின் நீர்பாசனத்திற்கு இந்த அணை மிகவும் உதவிகரமாக உள்ளது. திருச்சி நகரில் இருந்து 24 கி.மீ. தொலைவில் இந்த அணை உள்ளது. கல்லணை நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது. கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது அதிசயமே ஆகும்.

திருச்சியில் உள்ள “பாரத மிகுமின் தொழிலகம்” என்றும் சுருக்கமாக “பெல்” (BHEL) என்றும் அழைக்கப்படுகின்றது. மின்னுருவாக்கு நிலையங்களுக்கும் பெருவகை மின்னுருவாக்குத் துணைகருவிகளையும், மற்ற தொழில் துறை நிறுவனங்களுக்குத் தேவையான துணைக்கருவிகளையும் இந்நிறுவனம் உருவாக்கி வழங்குகிறது.

திருக்குறள்

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.                       (குறள்:247)

பொருள் இல்லாதவர்க்கு இப்பூவுலக இன்பம் இல்லாதது போலவே, அருள் இல்லாதவர்க்கு மேல் உலக இன்பம் இல்லை.

As this world is not for those who are without wealth, so that world is not for those who are without kindness.

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.                          (குறள்:396)

மணலில் தோண்டிய அளவு சிறு குளத்தில் நீர் ஊறும்; மக்கள் கற்ற அளவே அறிவும் வளரும்.

Water will flow from a well in the sand in proportion to the depth to which it is dug, and knowledge will flow from a man in proportion to his learning.

09. மாமல்லபுரம்

மாமல்லபுரம் சென்னையில் இருந்து தெற்கே சுமார் அறுபது கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. இது வங்காள விரிகுடாக் கரையோரமாக உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில்  இருக்கிறது. இது பல்லவ மன்னன் மாமல்லன் நினைவாக இவ்வாறு அழைக்கப் படுகிறது. பல்லவர் காலத்து துறைமுகப் பட்டினமாக இது விளங்கியது. மாமல்லபுரத்தை, மகாபலிபுரம் என்றும் அழைப்பதுண்டு.

கல்லிலே கலை வண்ணம் கண்டதற்கு மாமல்லபுரம் ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும். மாமல்லபுரத்து கட்டடங்களைக் குடைவரைக் கோயில்கள், ஒற்றைக்கல் கோயில்கள், கட்டுமானக் கோயில்கள் என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். குடைவரைக் கோயில்கள் என்பது பெரிய கற்குன்றுகளைக் குடைந்து கோயில்களாக்குவது. ஒற்றைக்கல் கோயில் என்பது மிகப்பெரிய ஒற்றைக்கல்லைக் குடைந்து இரதம் அல்லது கோயில் போல வடிவமைப்பது. கட்டுமானக் கோயில்கள் என்பது பெரிய கற்துண்டுகளை அழகாக ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கிக் கட்டடங்களைக் கட்டுவது.

மகாபலிபுரத்தில் உள்ள முக்கிய கலைச்சின்னங்களில் ஒன்றான கடற்கரைக் கோயில் உலகப்பாரம்பரிய தலமாக அங்கீகரிக்கப் பட்டிருக்கிறது. தென்னிந்தியாவில் திராவிட சிற்பக்கலை மரபை பிரதிபலிக்கும் மிக முக்கியமான கோயிலாக பிரசித்தி பெற்றுள்ளது.

சிவலிங்கம் மற்றும் விஷ்ணுவுக்கான சன்னதி ஆகியவை இந்த கோயிலில் இடம் பெற்றுள்ளன. சிம்ம வாகனத்தில் அமர்ந்தபடி துர்க்கை வீற்றிருக்கும் சிலையை இங்கு தரிசிக்கலாம்.

பஞ்ச ரதம் என்றழைக்கப்படும் ஐந்து ரதங்கள், நிஜத்தேர் போன்று காணப்படும் கோவில் வடிவிலானவை. இந்த ரதங்கள் ஒவ்வொன்றும் ஒற்றைக்கல்லில் செதுக்கப்பட்டவை. இவற்றுக்கு தர்மராஜ ரதம், பீம ரதம், திரௌபதி ரதம், நகுல-சகாதேவ ரதம் என பஞ்ச பாண்டவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. தர்மராஜ ரதத்தில், அர்த்தநாரீஸ்வரர் சிற்பம் உள்ளது.

சுமார் 30 மீட்டர் உயரமும்,  60 மீட்டர் அகலமும் கொண்ட சிற்பங்கள், செதுக்கப்பட்ட பாறையே அர்ச்சுனன் தபசு என்று அழைக்கப்படுகிறது. வானவர்கள், மனிதர்கள், மிருகங்கள் என பலவகையான சிற்பங்கள் காணப்படுகின்றன. ஏதோ ஒரு புராணக்கதை அடிப்படையில் இவை உருவாக்கப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. ஒற்றைக்காலில் நின்று அர்ச்சுனன் தவமிருக்க அருகே சூலாயுதம் ஏந்திய சிவன் வரம் கொடுப்பதாகச் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.  இது அர்ச்சுனன் தபசு என்றழைக்கப் படுகிறது.

கலங்கரை விளக்கத்திற்கு செல்லும் வழியில் குன்றின் மீது மகிஷாசுரமர்த்தினி மண்டபம் உள்ளது. மகிஷாசுரமர்த்தினி என்றழைக்கப்படும் சக்தி, மகிஷாசுரனை வதம் செய்ய பத்து கைகளுடன் தோன்றும் காட்சி இங்கு சித்திரிக்கப்பட்டுள்ளது. ஆயுதங்களுடன் ஆக்ரோஷமாக காணப்படும் மகிஷாசுரமர்த்தினியை எருமைத்தலை கொண்ட மகிஷாசுரன் கதாயுதத்துடன் எதிர்த்து நிற்கும் காட்சி சிறப்பாக உள்ளது.

இவை தவிர வராகமூர்த்தி சிற்பம், கோவர்த்தன மலை சிற்பம் போன்றவையும் நிறைய ஆச்சரியங்கள் கொண்டவை. இப்படி சிறப்பு வாய்ந்த மகாபலிபுர நினைவுச் சின்னங்களை உலகப் பண்பாட்டுச் சின்னங்களாக 1984ல் யுனெஸ்கோ அறிவித்தது. சோழமண்டல கலைக்கிராமத்தில் ஓவியங்கள், கைவினைப்பொருட்கள் மற்றும் சிற்பங்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. இப்பகுதியில் நில அகழ்வு செய்தபோது, 4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த உரோம, சீன நாணயங்கள் சில மண்ணுக்கடியில் கண்டெடுக்கப் பட்டிருக்கின்றன. இவை பண்டைய வாணிகத்திற்கு சான்றாக உள்ளன.

திருக்குறள்

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.                       (குறள்:231)

ஏழைகளுக்குக் கொடுப்பது; அதனால் புகழ் பெருக வாழ்வது; இப்புகழ் அன்றி மனிதர்க்குப் பயன் வேறு ஒன்றும் இல்லை.

Give to the poor and live with praise. There is no greater profit to man than that.

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.                                 (குறள்:475)

மயில்தோகைதானே என்று அதை அளவுக்கு அதிகமாக வண்டியில் ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்து போகும்.

The axle tree of a bandy, loaded only with peacocks’ feathers will break, if it be greatly overloaded.

01. பொருளாதாரத் தலைநகரம் – மும்பை

இந்தியாவின் மிகப்பெரிய நகரமான மும்பை, நாட்டின் நிதித்துறையின் தலைமையிடமாக கருதப்படுகிறது. மும்பை கனவுகளின் நகரமாகவும், நாகரிகத்தின் சின்னமாகவும், பாலிவுட்டின் இல்லமாகவும் பிரபலமாக உள்ளது. இனி மும்பையில் பார்க்க வேண்டிய இடங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.

மும்பையின் கொலாபா பகுதியில் அமைந்திருக்கும் கட்டடக் கலை அதிசயம் கேட்வே ஆஃப் இந்தியா.  இந்தக் கட்டடம் இந்து மற்றும் முஸ்லிம் கட்டடக்கலைகள் இரண்டையும் பிரதிபலிக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.  இது 1911-ஆம் ஆண்டு மும்பை வந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் மற்றும் ராணி மேரி இருவரையும் வரவேற்கும் பொருட்டு எழுப்பப்பட்டது.

மும்பை என்றாலே நினைவுக்கு வருவது போக்குவரத்து நெரிசலும்,  ஜனக் கூட்டமும், எண்ணற்ற உணவு வகைகளும் வேறுபட்ட கலாச்சாரங்களும் தான். மும்பையின் சமீபத்திய பெருமைக்கு காரணமாக விளங்குவது பாந்த்ரா-வோர்லி ஸீ லிங்க் என்று சொல்லலாம்.

இந்தப் பாலத்தின் மூலம் வோர்லி என்ற இடத்திலிருந்து வாகனத்தில் செல்லும் ஒரு பயணி, பாந்த்ரா என்ற இடத்தை பத்தே நிமிடத்தில் அடைந்துவிட முடியும். இது போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதுடன் பயணிகள் பார்த்து மகிழ வேண்டிய இடங்களில் ஒன்றாகும்.

மும்பையின் மரீன் டிரைவ் பகுதிக்கு நீங்கள் சென்றால் உலகின் பிரபலமான கடற்கரைகளில் ஒன்றான சௌபாத்தி பீச்சின் அழகைக் காணலாம். இங்கு பேல் பூரி, பானி பூரி, சாண்ட்விச்கள், ஃபல்லூடா போன்ற மும்பையின் சுவைமிகு தெருவோர உணவுகளை ருசிக்கலாம். அதுமட்டுமில்லாமல் இரவு வேலைகளில் மரீன் டிரைவ் பகுதியிலிருந்து பார்த்தால் மும்பையின் வானவிளிம்பு மின்விளக்குகளால் ஜொலிக்கும்.

மும்பையின் புகழ்பெற்ற வோர்லி பகுதியில் கடலை பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருக்கிறது ஹாஜி அலி மசூதி.

இங்கு சாதி மத வேறுபாடின்றி அனைத்துத் தரப்பு மக்களும் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். இதன் அருகில் உள்ள மகாலஷ்மி கோவிலும் பார்க்க வேண்டிய இடங்களில் மிக முக்கியமானதாகும்.

இதைத் தவிர, மும்பையில் காண வேண்டிய இடங்கள் எலிபெண்டா குகைகள், ஜஹாங்கீர் கலைக் கூடம், சித்தி விநாயகர் கோவில், எஸெல் வொல்ட், ஜுஹு கடற்கரை போன்றவைகளாகும்.

மும்பை என்றும் பரபரப்பாக இயங்கி வரும் இந்தியாவின் முதன்மையான வர்த்தக நகரம். சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள், தொழில் அதிபர்கள் என்று இந்தியாவின் முக்கிய புள்ளிகள் அனைவரும் இங்குதான் வசித்து வருகிறார்கள். இந்தியாவின் நுழைவு வாயில் என்ற சிறப்பை பெற்றுள்ள இந்நகரம் இந்தியாவின் பொருளாதாரத் தலை நகராக விளங்குகிறது.

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.                                (குறள்:3)

மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்.

They who are united to the glorious feet of Him who occupies swiftly the flower of the mind, shall flourish in the highest of worlds (heaven).

25. தாஜ்மஹால்

உலகப் புகழ் பெற்ற தாஜ்மஹால் ஆக்ராவில் அமைந்துள்ளது. இது யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. ஆக்ராவில் அக்பரால் கட்டப்பட்ட கோட்டையும் அதனுள் ஷாஜகானால் கட்டப்பட்ட அரண்மனை மற்றும் முத்து மசூதி ஆகியனவும் உள்ளன.

தாஜ்மஹால் உலகிலுள்ள ஏழு அதிசயச் சின்னங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இது முகாலயப்பேரரசர் ஷாஜஹான் அவர்களால் அவரது அழகிய மனைவி மும்தாஜின் நினைவாகக் கட்டப்பட்ட கல்லறை மாளிகையாகும். இந்திய, பர்ஷிய மற்றும் இஸ்லாமியக் கட்டிடக்கலை அம்சங்கள் கலந்து இந்த பிரம்மாண்டமான நினைவுச் சின்னம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

1632ம் ஆண்டில் துவங்கப்பட்ட இதன் கட்டுமானத்தை முடிப்பதற்கு 21 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன. ஆயிரக்கணக்கான கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் இதன் நிர்மாணத்தில் பங்கேற்றிருக்க வேண்டும்.

இந்த மாளிகை வளாகத்தின் பிரதான அம்சம் மும்தாஜின் கல்லறை அமைந்திருக்கும் விசாலமான கட்டமைப்பாகும். ஒரு சதுர வடிவ மேடைப்பீடத்தின் மீது அமைக்கப்பட்டிருக்கும் சலவைக்கற்களாலான கல்லறையைச் சுற்றிக் குமிழ் வடிவக் கூரை மற்றும் தோரண வாயில்களுடன் இந்த மாளிகை காட்சியளிக்கிறது.

40 மீட்டர் உயரம் கொண்ட நான்கு மினாரெட்டுகள் (தூண் கோபுரங்கள்) இந்த பிரதான கல்லறை மாளிகையைச் சுற்றிலும் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு தூண் கோபுரமும் மூன்று தளங்கள் மற்றும் இரண்டு உப்பரிகைகளுடன் காட்சியளிக்கின்றன.

இந்த மாளிகை அமைப்பைச் சுற்றிலும் 300 சதுர மீட்டர் பரப்பில் ‘சார்பாக்’ எனும் பூங்கா அமைந்துள்ளது. மேடை போன்ற நடைபாதைகளால் 16 சதுர புல்வெளி பூத்தரைகளாக இந்த பூங்கா பிரிக்கப்பட்டிருக்கிறது.

காதலிற்கும், கட்டடக் கலைக்கும் அதிசயத்தக்க அழியாத சான்றாக இருந்துவரும் தாஜ்மஹால் அருகே, யமுனை நதிக்கரையிலுள்ள மற்றுமொரு பிரம்மாண்ட மானுடப் படைப்பாக திகழ்கிறது லால் கீலா என்றழைக்கப்படும் ஆக்ராவின் செங்கோட்டை.

இரண்டரை கிலோ மீட்டர் சுற்றளவில் உறுதியான சுவர்களுடன் திகழும் இக்கோட்டை, ஓராயிரம் ஆண்டுக் கால வரலாற்றுச் சுவடாக விளங்குகிறது. முகலாயப் பேரரசர் ஷாஜஹானின் கை வண்ணமே ஆக்ரா கோட்டையை, இந்த நாட்டிலுள்ள மற்ற கோட்டைகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.

தனது காதல் மனைவி மும்தாஜ் இறந்தபின், அவளின் நினைவாக படைத்த தாஜ்மஹாலை, தனது வாழ்வின் கடைசி காலத்தில் தனது மகனால் இதே கோட்டையில் சிறைவைக்கப்பட்டிருந்தபோது, மூசாம்மன் புர்ஜ் கலைக்கூடத்திலிருந்து பார்த்துக் கொண்டே இருந்தார் ஷாஜஹான் என்று வரலாறு கூறுகிறது.

ஆக்ரா கோட்டைக்குள் ஷாஜஹான் கட்டிய அழகிய பகுதிகளில் எங்கிருந்து பார்த்தாலும் தாஜ் மஹாலின் உன்னத காட்சியைக் காணலாம். முகலாய பேரரசர்கள் இக்கோட்டையிலிருந்துதான் இந்தியாவை ஆண்டுள்ளார்கள். இன்றைக்கும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தாஜ்மஹாலையும், இக்கோட்டையையும் பார்க்க வருகிறார்கள்.

திருக்குறள்

உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.                                    (குறள்: 592)

மன உறுதியே நிலையான உடைமை; செல்வம் உடைமையோ நிலைத்திராமல் நீங்கிவிடும்.

The possession of (energy of) mind is true property; the possession of wealth passes away and abides not.

குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும்.                                   (குறள்:601)

ஒருவனிடம் சோம்பல் என்னும் இருள் நெருங்கினால் அவன் பிறந்த குடும்பமாகிய அணையாத விளக்கு ஒளி மங்கி அழிந்து போகும்.

By the darkness of idleness, the indestructible lamp of family (rank) will be extinguished.