04. இலக்கணம் – முதல் எழுத்துக்கள்

‘அ’ முதல் ‘ஔ’ வரையுள்ள 12 உயிரெழுத்துகளும், ‘க்’ முதல் ‘ன்’ வரையுள்ள 18 மெய்யெழுத்துகளும் ஆகிய (18+12=30) முப்பதும் முதலெழுத்துகள் எனப்படும்

தமிழ் மொழி “ஒலியை” அடிப்படையாக கொண்டது. அடிப்படை ஒலிகளின் எழுத்து வடிவம் தமிழிலில் “உயிர் எழுத்து” என்கிறோம். எழுத்துகளுக்கெல்லாம் உயிராக இருப்பதனால் இவை உயிரெழுத்துகள் எனப்படுகின்றன. ஆங்கிலத்தில் இதனை ‘Vowels’ என்று குறிப்பிடுவார்கள்.

உயிரெழுத்துகள் 12 அவை:

உயிரெழுத்துக்கள் குறில், நெடில் என இரண்டு வகைப்படும்.
குறில் எழுத்துக்கள்:

அ, இ, உ, எ, ஒ என்ற எழுத்துகளைச் சொல்லக் குறைந்த முயற்சியும், குறைந்த நேரமும் ஆகிறது. எனவே இவை குறில் எழுத்துக்கள் எனப்படுகின்றன.

நெடில் எழுத்துக்கள்:

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்ற எழுத்துகளைச் சொல்ல நிறைந்த முயற்சியும், நிறைய நேரமும் தேவைப்படுகின்றன. எனவே இவை நெடில் எழுத்துக்கள் எனப்படுகின்றன.

ஓர் எழுத்தைச் சொல்வதற்கு அதாவது, ஒலிப்பதற்கு ஆகும் நேர அளவு மாத்திரை எனப்படுகிறது. குறில் எழுத்தின் ஒலிப்பு நேரம் ஒரு மாத்திரை. நெடில் எழுத்தின் ஒலிப்பு நேரம் இரு மாத்திரைகள்.

ஒரு மாத்திரை என்பதை நமது புரிதலுக்காக ஒரு வினாடி என்று எடுத்துக் கொள்ளலாம். குறில் எழுத்தின் ஒலிப்பு நேரம் ஒரு வினாடி. நெடில் எழுத்தின் ஒலிப்பு நேரம் இரு வினாடிகள். மெய் எழுத்துகள் குறில் எழுத்துகளைவிடக் குறைவான நேரத்தில் ஒலிக்கப்படுகின்றன. ஒரு மெய் எழுத்தின் ஒலிப்புநேரம் 1/2 மாத்திரை அல்லது அரை வினாடி ஆகும்

மெய்யெழுத்துகள்:

உயிரெழுத்துகள் இயங்க உடல் போன்று செயல்படுவதால் மெய்யெழுத்துகள்(உடல்) எனப்படுகின்றன. மெய்யெழுத்துகள் ‘ஒற்று’ எழுத்து என்றும் அழைக்கப்படும். ஒற்று என்றால் புள்ளி என்று அர்த்தம். இவ்வெழுத்துக்களுக்கு மேலே புள்ளி இருப்பதால் இவை ஒற்று எழுத்து என்று அழைக்கப்படுகின்றன.

மெய்யெழுத்துகள் 18 அவை:

மெய்யெழுத்துக்கள் மூன்று வகைப்படும். அவை:

  1. வல்லினம்
  2. மெல்லினம்
  3. இடையினம்

வன்மையான ஓசை உடைய மெய்யெழுத்துகள் வல்லின எழுத்துக்கள் என அழைக்கப்படுகின்றன.

க், ச், ட், த், ப், ற் என்ற எழுத்துகளைச் சொல்லிப் பாருங்கள். இவ்வெழுத்துகளைச் சொல்லும் பொழுது வயிற்றுள் இருந்து வலிமையாக காற்று மேலே வரும். எனவே இவை வல்லின எழுத்துக்கள் ஆகும்.

மெல்லிய ஓசை உடைய மெய்யெழுத்துகள் மெல்லின எழுத்துக்கள் என அழைக்கப்படுகின்றன.

ங், ஞ், ண், ந், ம், ன் என்ற எழுத்துகளைச் சொல்லிப் பாருங்கள். இவ்வெழுத்துகளைச் சொல்ல மென்மையான முயற்சி போதும். எனவே இந்த மென்மையான எழுத்துகள் மெல்லின எழுத்துக்கள் எனப்படுகின்றன.

வல்லினத்திற்கும்,மெல்லினத்திற்கும் இடைப்பட்ட ஓசை உடைய எழுத்துகள் இடையின எழுத்துக்கள் என்று அழைக்கப்படுகின்றன.

ய், ர், ல், வ், ழ், ள் என்ற எழுத்துகளைச் சொல்லிப் பாருங்கள். இவ்வெழுத்துகளைச் சொல்ல மென்மையும், வன்மையும் இல்லாமல் இடைப்பட்ட முயற்சி தேவைப்படுகிறது.

பன்னிரண்டு உயிர் எழுத்துகளும், பதினெட்டு உடல் (மெய்) எழுத்துகளும் சேர்ந்து மொத்தம் 30 எழுத்துகளும் தமிழ் மொழியின் முதல் எழுத்துக்கள் எனப்படுகின்றன.

02. இலக்கணம் – அறிமுகம்

ஒரு மொழிக்குச் சிறப்பை, அழகைக் கொடுப்பது இலக்கணம். எல்லா மொழிக்கும் இலக்கணம் தேவையானது. மொழியை மேலும் அழகுறச் செய்வது இலக்கணமாகும். இலக்கணம் தெரியாமல் ஒரு மொழியைப் பேசும் போது அதன் அழகு அழிந்து விடுகிறது.  

உதாரணமாக தமிழை இலக்கணத்துடன் படிக்காதவர்கள் எப்படிப் பேசுவார்கள் என்று பார்ப்போம்.

“தாத்தா வீட்டுக்கு வந்துச்சு”  

தமிழை இலக்கணத்துடன் படித்தவர்கள் எப்படிப் பேசுவார்கள் என்று பார்ப்போம்.

தாத்தா வீட்டிற்கு வந்தார்”  

கேட்பவர்கள் இரண்டு வாக்கியங்களின் அர்த்தத்தையும் ஒரே மாதிரியாகப் புரிந்து கொண்டாலும் இரண்டாவது வாக்கியம் மொழியின் அழகை வெளிக் கொண்டு வருகிறது.   தவறில்லாமல் பேசவும் எழுதவும் உதவுவது இலக்கணம்.

மனிதன், தன் எண்ணத்தினை வெளிப்படுத்தப் பயன்படுவது எழுத்தும் சொல்லும் அதனாலாகிய பேச்சும் தான். எழுத உதவுவதோடு, படிக்கவும் உதவுவது இலக்கணமாகும்.  

தமிழில் இலக்கணம் ஐந்து வகைகளைக் கொண்டது:  

எழுத்து இலக்கணம்: தமிழ் ஒலியை அடிப்படையாக் கொண்ட மொழி. தமிழ் இலக்கண நூல்களில் “எழுத்து” என்ற சொல் மொழியில் வழங்கும் ஒலிகளைக் குறிக்கவும், அவ்வொலிகளுக்குரிய வரிவடிவத்தைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. எழுத்தின் வகைகளை விளக்குவதே எழுத்து இலக்கணமாகும்.   உதாரணம்: அ, ஆ, க, கா, சி, சை, ப, பூ  

சொல் இலக்கணம்: ஓர் எழுத்து தனித்து நின்றோ பல எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள் தருவது சொல் எனப்படும். இவ்வாறு சொற்கள் எழுத்திலிருந்து உருவாவதையும் சொற்களின் வகைகளையும் பற்றி விளக்குவதே சொல் இலக்கணம் ஆகும்.   உதாரணம்: கை, மை, மான், அம்மா, அப்பா, அக்கா, அண்ணன், ஓடு, பாடு, விளையாடு  

பொருள் இலக்கணம்: அகப் பொருள், புறப் பொருள் என இரண்டாக பிரித்து விளக்குவதே பொருள் இலக்கணம் ஆகும்.  

யாப்பு இலக்கணம்: செய்யுள் வகைகளை விளக்குவதே யாப்பு இலக்கணமாகும்.  

அணி இலக்கணம்: செய்யுளில் அமைந்திருக்கும் சொல்லழகு, பொருளழகு ஆகியவற்றை விளக்குவதே அணி இலக்கணமாகும்.  

இதில் நாம் எழுத்து இலக்கணத்தையும் சொல் இலக்கணத்தையும் விரிவாகப் படிக்கப் போகிறோம்.

மற்ற மூன்று வகைகளைப் பெரிய வகுப்புகளில் படிக்கலாம்.