04. முதலாம் இரண்டாம் வேற்றுமை உருபு

ஒரு பெயர்ச் சொல்லின் பொருளை வேறு படுத்திக் காட்ட உதவும் உறுப்புக்கு வேற்றுமை உருபு என்று பெயர்.

எடுத்துக்காட்டாக கீழே கொடுத்துள்ள இரண்டு வாக்கியங்களைப் பார்ப்போம்.

  1. கந்தன் அடித்தான்.
  2. கந்தனை அடித்தான்.

இதில் இரண்டாவது வாக்கியத்தில் ‘கந்தன்’ என்பது பெயர்ச்சொல். ‘அடித்தான்’ என்பது வினைச்சொல். ‘ஐ’ என்பது வேற்றுமை உருபு.

இதில் சேர்ந்துள்ள ‘ஐ’ என்ற வேற்றுமை உருபு அந்த வாக்கியத்தின் பொருளை மாற்றிக் காட்டுகிறது. முதல் வாக்கியத்தில் கந்தன் அடிக்கிறான். இரண்டாவது வாக்கியத்தில் கந்தன் அடி வாங்குகிறான்.

தமிழில் உள்ள வேற்றுமை உருபுகளை எட்டு வகைகளாகப் பிரிக்கலாம். அவை

  1. முதல் வேற்றுமை அல்லது எழுவாய் வேற்றுமை
  2. இரண்டாம் வேற்றுமை – ‘ஐ’
  3. மூன்றாம் வேற்றுமை – ‘ஆல்’
  4. நான்காம் வேற்றுமை – ‘கு’
  5. ஐந்தாம் வேற்றுமை – ‘இன்’’
  6. ஆறாம் வேற்றுமை – ‘அது’
  7. ஏழாம் வேற்றுமை – ‘கண்’
  8. எட்டாம் வேற்றுமை அல்லது விளி வேற்றுமை

முதல் (எழுவாய்) வேற்றுமை:

பெயர்ச் சொல் எந்த மாற்றமும் அடையாமல் நிற்கும்பொழுது எழுவாய் (Subject) எனப்படும். எந்த உருபும் சேராமல் இவ்வாறு எழுவாயாய் அமையும் பெயர்ச் சொல் எழுவாய் வேற்றுமை எனப்படும்.

எழுவாய் வேற்றுமைக்கு தனி உருபு இல்லை. ஆனவன், ஆனவள், ஆனவர், ஆனது, ஆனவை, என்பனவும், என்பவன், என்பவள், என்பவர், என்பது, என்பவை ஆகியவை சொல் உருபுகளாக வரும்.

எடுத்துக்காட்டாக ‘கந்தன் அடித்தான்’ என்ற வாக்கியத்தில் ‘என்பவன்’ என்ற முதலாம் வேற்றுமைச் சொல் உருபு மறைந்து வந்துள்ளது. ‘கந்தன் என்பவன் அடித்தான்’ என்று நாம் புரிந்து கொள்கிறோம்.

இரண்டாம் வேற்றுமை:

இரண்டாம் வேற்றுமை உருபு – ஐ மட்டுமே. இது எப்போதும் ஒரு வாக்கியத்தில் செயப்படு பொருளுடன் (Object) இணைந்து வரும். எனவே இதற்கு மற்றோரு பெயர் செயப்படுபொருள் வேற்றுமை என்பதாகும்.

எடுத்துக்காட்டாக, கீழ் வரும் வாக்கியங்களைப் பார்க்கலாம்.

  • நான் பாலைச் சிந்தினேன்
  • நீ மோரைக் குடித்தாய்

மேலும் சில எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம். இதில் முதல் வாக்கியத்தில் வேற்றுமை உருபு இல்லை. இரண்டாவது வாக்கியத்தில் ‘ஐ’ என்ற வேற்றுமை உருபு உபயோகிக்கப் பட்டுள்ளது.

  1. அவன் ஒரு கடிதம் எழுதினான்
  2. அவன் ஒரு கடிதத்தை  எழுதினான்
  1. அவள் பால் குடித்தாள் 
  2. அவள் பாலைக் குடித்தாள்
  1. நான் அந்த நாய் பார்த்தேன்
  2. நான் அந்த நாயைப் பார்த்தேன்
  1. நீ என் தம்பி கண்டு பிடிப்பாய்
  2. நீ என் தம்பியைக் கண்டு பிடிப்பாய்

இரண்டாவது வாக்கியம் மிகச் சரியானது. இப்போது சில பெயர்ச் சொல்லுடன் இரண்டாம் வேற்றுமை உருபு எவ்வாறு சேருகிறது என்று பார்ப்போம்.

இப்போது சில பிரதிப்பெயர்ச் சொல்லுடன் இரண்டாம் வேற்றுமை உருபு எவ்வாறு சேருகிறது என்று பார்ப்போம்.

இங்கு பிரதிப்பெயர்ச் சொல்லுடன் இரண்டாம் வேற்றுமை உருபு சேரும் போது வார்த்தை முழுவதுமாக மாறுவதைப் பார்க்கவும்.