21. ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு

அடர்ந்த காட்டில் ஒரு கர்வம் கொண்ட சிங்கம் வாழ்ந்து வந்தது. நான் தான் இந்த காட்டுக்கு ராஜா என்ற கர்வத்துடன் அந்தச் சிங்கம் காட்டில் வாழ்ந்த அனைத்து மிருகங்களையும் வேட்டையாடியது.

மற்ற சிங்கங்கள் உணவுக்காக வேட்டையாடும். ஆனால் இந்தச் சிங்கம் பொழுதுபோக்கிற்காக வேட்டையாடியது. இதனால் காட்டில் வாழ்ந்த மற்ற மிருகங்கள் சிங்கத்தின் மீது கோபம் கொண்டன.

ஒவ்வொருநாளும் சிங்கம் பல மிருகங்களை வேட்டையாடியது. இதனைக் கண்ட மற்றைய மிருகங்கள் மிக்க பயத்துடன் வாழ்ந்து வந்தன. சிங்கம் இப்படி பல மிருகங்களை ஒவ்வொருநாளும் கொல்வதால் தாம் வெகு சீக்கிரமே இறந்துவிடுவோம் என எண்ணி அவை எல்லாம் ஒன்றுகூடி ஆலோசனை செய்தன.

சிங்கத்தை எதிர்த்து அவைகளால் போராட முடியாது என்பது அவைகளுக்கு நன்கு தெரியும். அதனால் அவை சிங்கத்திற்கு இரையாக தினமும் ஒவ்வொரு மிருகமாகப் போவது என்று தீர்மானித்தன.

எல்லா மிருகங்களும்  சேர்ந்து குரங்கைத் தூதுவனாக அனுப்பின. சிங்கம் குரங்கை பார்த்து, “உனக்கு என்ன துணிச்சல் இருந்தால் என் குகைக்கு வந்திருப்பாய்?” என்றது.

அதற்குக் குரங்கு, “எல்லா மிருகங்களும் தினம் ஒருவராக உங்கள் குகைக்கு இரையாக வருவது என்று முடிவெடுத்துள்ளன. அதனால் சிங்கராசா நீங்கள் இரை தேடி அலையத் தேவையில்லை. இதைச் சொல்லவே நான் குகைக்குள் வந்தேன்.” என்றது.

“ஏன் இந்த முடிவு?” என்றது சிங்கம்.

“தினம் தினம் எந்த மிருகம் உங்களால் வேட்டையடப்படும் என்ற பயத்துடன் வாழ்வதை விட, தினம் ஒருவராக உங்கள் குகைக்கு இரையாக வந்தால் மற்ற மிருகங்கள் பயமின்றி சிறிது காலம் வாழலாம்” என்றது.

“அத்துடன் நீங்கள் பல மிருகங்களை ஒரே நாளில் கொன்றால் நாங்கள் எல்லோரும் சீக்கிரமே இறந்து விடுவோம். பின்பு உங்களுக்கும் உணவு கிடையாமல் நீங்களும் சீக்கிரமே இறந்து விடுவீர்கள்” என்றது.

இதனைக் கேட்ட சிங்கராசாவுக்கு மகிழ்ச்சி பொங்கியது. மேலும் குரங்கிடம் “தவறாமல் தினமும் காலையில் ஒரு மிருகம் கண்டிப்பாக வரவேண்டும். இல்லையென்றல் அனைவரையும் வேட்டையாடி விடுவேன்” என்றது.

அன்றிலிருந்து தினமும் ஒவ்வொரு மிருகமாகச் சிங்கத்திற்கு இரையாகச் சென்றன. ஒருநாள் ஒரு முயலின் முறை வந்தது. முயல் சிங்கத்தின் குகைக்கு சிறிது தாமதமாகச் சென்றது.

அதனால் சிங்கம் மிகுந்த கோபத்துடன் இருந்தது. சிங்கம் முயலைப் பார்த்து “நீ ஏன் தாமதமாக வந்தாய்?” என கர்ச்சித்தது.

அதனைக் கேட்ட முயல் நடுக்கத்துடன் “சிங்கராசா,  நான் வரும் வழியில் வேறொரு பெரிய சிங்கம் என்னை வேட்டையாட முயற்சி செய்தது. நான் பதுங்கி இருந்துவிட்டு பிறகு வருகிறேன்” என்றது.

என்னைவிட பெரிய சிங்கம் இந்தக் காட்டில் இருக்கிறதா? என்று ஆத்திரத்துடன்  கேட்டது.

அதற்கு “சிங்கராசா வாருங்கள் காட்டுகின்றேன்” என்று சிங்கத்தை அழைத்துச் சென்று ஒரு கிணற்றைக் காட்டி இதற்குள்தான் அந்த பெரிய சிங்கம் இருக்கிறது என்று கூறியது.

அதனை நம்பிய சிங்கம் கிணற்றை எட்டிப் பார்த்தது. அப்போது சிங்கத்தின் பிம்பம் வேறொரு சிங்கம் கிணற்றினுள் இருப்பது போல் தெரிந்தது. சிங்கம் அதைப் பார்த்து கர்ச்சித்தது.

பிம்பமும் கர்ச்சித்தது. சிங்கத்திற்கு ஆத்திரம் பொங்கியது. “இதோபார் உனக்கு ஒரு முடிவு கட்டுகிறேன்” என கூறிக்கொண்டு கிணற்றினுள் பாய்ந்தது. சிங்கம் கிணற்று நீரில் மூழ்கி மாண்டது. முயல் துள்ளிக் குதித்து வெற்றியை மற்ற மிருகங்களிடம் சென்று கூறியது. காட்டில் கொண்டாட்டம் தொடங்கியது. முயலின் சமயோசித முயற்சியால் மற்ற மிருகங்களும் காப்பாற்றப்பட்டன.

நீதி: முயற்சியும் திறமையும் இருந்தால் எதையும் வென்றிடலாம். மேலும் ஆத்திரப்படுபவர்கள் யோசிக்கும் திறன் இழந்து முட்டாளாக ஆகிவிடுகிறார்கள்.

திருக்குறள்

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.                                 (குறள்:400)

கல்வியே அழிவு இல்லாத சிறந்த செல்வம்; பிற எல்லாம் செல்வமே அல்ல.

Learning is the true imperishable riches; all other things are not riches.

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.                                   
(குறள்: 416)

சிறிது நேரமே என்றாலும் உறுதி தரம் நற்பொருளைக் கேட்க வேண்டும். அதுகூட நிறைந்த பெருமையைத் தரும்.

Let a man listen, never so little, to good (instruction), even that will bring him great dignity.