07. நம்பியவரைக் கைவிடாதே

கந்தனின் தந்தையிடம் நூறு ஆடுகள் இருந்தன. தினமும் காலையில் அவர் அவற்றை மேய்க்க ஓட்டிக்கொண்டு காட்டிற்கு செல்வார். மாலை ஆறு மணிக்கு பிறகு அவற்றை திரும்ப வீட்டிற்கு ஓட்டி வந்துவிடுவார்.

அப்படி செல்கையில் ஒரு நாள் மாலை மேய்ந்துவிட்டு வந்ததும் அவற்றை பட்டியலில் அடைக்கு முன் எண்ணிப் பார்த்தார். 99 ஆடுகளே இருந்தன. ஒரு ஆடு குறைந்தது.

எல்லா ஆடுகளையும் அடைத்துவிட்டு காணாமல் போன அந்த ஒரு ஆட்டைத் தேடி மீண்டும் காட்டுப்பகுதிக்குள் சென்றார். கந்தனின் தாயோ  “இரவு நேரத்தில் காட்டிற்குள் செல்லவேண்டாம். ஒரு ஆடு தானே, பரவாயில்லை மீதி 99 ஆடுகள் இருக்கிறதே” என்றாள். ஆனாலும் கந்தனின் தந்தை அந்த ஒரு ஆட்டைத் தேடிச் சென்றார்.

காட்டிலும் மேட்டிலும் அந்த ஆட்டைத் தேடினார். நீண்ட நேரத்திற்கு பின் ஒரு பாறையின் உச்சியில் கீழே இறங்க வழி தெரியாது அந்த ஆடு திணறிக்கொண்டிருப்பதை பார்த்தார். மெல்ல அந்த ஆட்டை பிடித்துக்கொண்டு திரும்பினார்.

அந்த ஆடு நன்றியுடன் அவரைப் பார்த்தது. அதன் கண்களில் நன்றிப் பெருக்கில் கண்ணீர். பின் அவர் கந்தனின் தாயிடம், “நீ ஒரு ஆடு தானே, தேடப் போகவேண்டாம் என்றாய். நான் அப்படிச் செல்லாதிருந்தால் இந்த ஒரு ஆட்டை இழந்திருப்போம்” என்றார். கந்தனும் “ஆமாம் அம்மா” என்றான்.

மேலும் அவனது தந்தைக் கூறினார். “எண்ணிக்கை முக்கியமில்லை. காணாமல் போன அந்த ஆடும் என்னை நம்பியே மேய வந்தது. என்னை நம்பி வந்தது வழிதவறி தடுமாறி திரும்பமுடியவில்லை. ஆயினும் நம்பிய அதை காக்க வேண்டியது என் கடமை. இது ஆட்டிற்கு மட்டுமல்ல அனைவருக்குமே பொருந்தும். நம்மை நம்பியவரை நாம் என்றும் கைவிடக்கூடாது.”

எழுதிப் பழகுக: