11. முட்டாள் ஆடுகள்-வடிவங்கள்

அது ஒரு அடர்ந்த காடு. அந்த காட்டின் நடுவே ஒரு குறுகிய பாலம் ஒன்று ஆற்றின் நடுவில் இருந்தது. ஒரு நாள் அந்த பாலத்தைக் கடப்பதற்காக இரண்டு ஆடுகள் பாலத்தின் அருகில் வந்தன. ஒரு ஆடு பாலத்தின் ஒரு முனையிலும் மற்றொன்று மறுமுனையிலும் வந்து நின்றன.

அந்த பாலத்தை ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே கடக்க முடியும். இது தெரிந்தும் இரண்டு ஆடுகளும் பாலத்தை கடப்பதற்காக ஒரே நேரத்தில் ஏறி பாலத்தின் நடுவில் வந்து நின்றன.

முதலாவது ஆடு “எனக்கு வழி விடு நான் செல்ல வேண்டும்” என்றது. உடனே, இரண்டாவது ஆடு “நான் தான் முதலில் வந்தேன்; எனக்கு நீ தான் வழி விடவேண்டும்” என்றது. இப்படியே இரண்டு ஆடுகளும் விட்டுக்கொடுக்காமல் சண்டையிடத் தொடங்கின. சண்டையிடும் போது இரண்டு ஆடுகளின் கால்களும் பிடிமானம் இன்றி ஆற்றில் விழுந்தன.

ஆற்றில் விழுந்தவுடன் இரண்டு ஆடுகளும் தங்கள் செய்த தவறை நினைத்து வருந்தின. இறுதியில் இரண்டு ஆடுகளும் நீரில் மூழ்கி இறந்தன.

நீதி: விட்டுக் கொடுக்க வேண்டிய நேரத்தில் கண்டிப்பாக விட்டுகொடுக்க வேண்டும்.

வடிவங்கள்