13. முனைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்

ஆசிரியப் பணி என்பது ஏதோ வாசித்து விட்டுப் போவதில்லை என்பதை செய்து காட்டி இந்திய ஆசிரியர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவர் முனைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன். வாழ்க்கையை, வாழ்க்கைத் தத்துவத்தை, ஒழுக்கத்தை, கட்டுப்பாட்டை, அறிவை மாணவர்களுக்கு ஊட்டுவதே ஒரு நல்லாசிரியரின் அழகு. அதனினும் மேலாக ஒரு தாயாக, ஒரு தந்தையாக இருந்து மாணவர்களை நல்வழிப்படுத்தும் முக்கியப் பங்கு ஆசிரியர்களுக்கு உண்டு.

அவர் குடும்பம் வறுமையில் இருந்ததால் அப்பா இவரை கோயில் குருக்களாக போக சொன்னார். ஆனால், இவரை கல்வி கற்க வேண்டும் என்கிற ஆர்வம் உந்தித்தள்ளியது. புத்தகம் வாங்க காசில்லாமல் இவரின் உறவுக்காரர் தத்துவம் படித்து வைத்து இருந்த பழைய புத்தகங்கள் மட்டுமே இருந்ததால் வேலூர் வூரிஸ் கல்லூரியிலும், பின் சென்னை கிறித்துவ கல்லூரியில் தத்துவம் பயின்றார்.

வறுமை வாட்டி எடுத்ததால் கல்லூரியில் பெற்ற பதக்கங்களை அடமானம் வைத்து செலவுகளை சமாளித்து இருக்கிறார்; தத்துவம் படித்து முடித்த பின் சென்னை மாநில கல்லூரியில் உதவி பேராசிரியராக சேர்ந்ததும் தட்டு வாங்க காசு இல்லாமல் வாழை இலையில் தான் தினமும் உண்டு இருக்கிறார். வெகு விரைவிலேயே அவரின் இந்தியத் தத்துவங்கள் சார்ந்த கட்டுரைகள் உலகம் முழுக்க கவனம் பெற்றன. ஒன்பதே ஆண்டுகளில் மைசூர் பல்கலைகழகம் பேராசிரியராக இவரை பணியமர்த்தியது. மாணவர்களிடம் தலைசிறந்த ஆசிரியர் என பெயர் பெற்றார்.

சாதாரண ஆசிரியராக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன், இந்தியக் குடியரசுத் தலைவராகி ஆசிரியர் சமுதாயத்திற்கே கெளரவமும், பெருமையும், பேறும் தேடிக் கொடுத்தவர். தன் சம்பளமான பத்தாயிரத்தில் 2,500 மட்டும் பெற்றுக்கொண்டு மீதத்தை பிரதமரின் நிவாரண நிதிக்கு கொடுத்து விடுவதை வழக்கமாக கொண்டு இருந்தார்.

மாணவர்களுக்கு மட்டும் ஆசிரியராக இல்லாமல், ஆசிரியர் சமுதாயத்திதற்கே பேராசிரியராக விளங்கிய பெருமகன் முனைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன். மாணவர்களை தனது பிள்ளைகள் போல பாவித்து அவர்களுக்கு அறிவூட்டிய தாயுமானவன், முனைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்.

ஆசிரியராக பணியாற்றுவதை ஒரு வேள்வி போல செய்த முனைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன், மாணவர்களின் சந்தேகங்களை மிகப் பொறுமையுடன் விளக்கி அவர்களை தெளிவுபடுத்தியவர். தன் வீட்டுக்கே வந்து மாணவர்கள் பாடங்களில் சந்தேகம் கேட்கலாம் என்ற உரிமையைக் கொடுத்தவர்.

ரஷ்யாவில் தூதராகப் பணியாற்றியபோதும் கூட அவர் தனது ஆசிரியப் பணியை கைவிட முன்வரவில்லை. மாறாக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆசிரியாரகப் பணியாற்ற அனுமதி பெற்று பணியாற்றினார். படிக்க வேண்டும், படித்துத் தெளிய வேண்டும், தெளிந்து அதன்படி நடக்க வேண்டும், நாம் பெற்றது நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் பாடம் நடத்தியவர் முனைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்.

தனது பிறந்த நாளை ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாட வேண்டும் என்று அவர் விடுத்த கோரிக்கையை ஏற்ற இந்திய அரசு செப்டம்பர் 5ம் தேதியை ஆசிரியர் தினமாக கொண்டாட உத்தரவிட்டது. அத்தோடு நில்லாமல் மாநில அளவிலும், தேசிய அளவிலும் நல்லாசிரியர் விருதுகளும், திறம்பட பணியாற்றும் ஆசிரியப் பெருமக்களுக்கு வழங்கப்பட்டு கெளரவிக்கப்படுகிறது.

இந்தியாவின் முதல் பாரத ரத்னாவை சி.வி.ராமன், ராஜாஜி ஆகியோருடன் இவரும் பெற்றுக்கொண்டார்

திருக்குறள்

செவுக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.                          (குறள்:412)

செவிக்கு உணவாகிய கேள்வி கிடைக்காதபோது, வயிற்றுக்கும் சிறிது உணவு இடப்படும்.

When there is no food for the ear, give a little also to the stomach.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.                      (குறள்:423)

எந்தக் கருத்தை எவர் சொன்னாலும், அக்கருத்தின் உண்மையைக் காண்பது அறிவு.

To discern the truth in everything, by whomsoever spoken, is wisdom.

05. தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதையர்

தமிழ் மொழியின் பழம்பெருமையைப் பலர் அறியாமல் வாழ்ந்து வந்த காலத்தில், அதாவது 19-ஆம் நூற்றாண்டின் நடுவில், தமிழுக்குப் புத்துயிர் ஊட்டியவர் தமிழ்த் தாத்தா என்று அழைக்கப்படும் பேராசிரியர் உ.வே. சாமிநாத ஐயர் என்கிற உ.வே.சா.

1855-ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 19-ஆம் நாள் நாகை மாவட்டம் சூரியமூலை என்ற ஊரில் வேங்கடசுப்பையா சரஸ்வதி தம்பதியாருக்கு மகனாகப் பிறந்த இவர் தமிழுக்கு ஆற்றிய அரும்பணியும், அதன்பொருட்டு அவர் அடைந்த இன்னல்களும், தமிழ் மொழியைத் தாய்மொழியாக கொண்ட அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய அரிய வரலாறு!

அக்காலத்தில் நூல்கள் அனைத்தும் ஏட்டுச் சுவடிகளில், அதாவது பனை ஓலையில் எழுதப்பட்டிருந்தன.  இதுபோன்ற ஏட்டுச்சுவடிகளை ஆராய்ந்து பின்பு நூல் வடிவில் பதிப்பிக்க விரும்பினார். அதன்பொருட்டு திருவாவடுதுறை, திருப்பனந்தாள், தருமபுரம் போன்ற தமிழ் வளர்த்து வரும் ஆதீனங்களில் சுவடிகளைத் தேடி அலைந்தார். அங்கு பல சுவடிகள் கரையான்களால் அரிக்கப்பட்ட நிலையில் இருக்கக் கண்டு மனம் புண்பட்டார்.

அப்போது ஆங்கிலேயர் ஆட்சி நம் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது தமிழ் ஓலைகளைப் படிப்பவரும் இல்லை, அவற்றை பாதுகாக்க நினைப்பவரும் இல்லை என்ற நிலை நாட்டில் நிலவியது.

இந்நிலையிலும் இவரது தமிழ் ஆர்வத்தைக் கண்டு வியந்த தருமபுரம் ஆதீனத்தின் தலைவர் அங்கிருந்த 50-க்கும் மேற்பட்ட சுவடிகளை உ.வே. சாமிநாதருக்குக் கொடுத்து உதவினார்.

முதன் முதலில் பதிப்பித்த நூல் சீவகசிந்தாமணி. அடுத்து சங்க இலக்கியங்களுள் ஒன்றான பத்துப்பாட்டு என்ற நூலை அச்சிட்டு வெளியிட்டார். அதன் பிறகு சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டார்.

அடுத்து குறுந்தொகை என்ற இலக்கியத்திற்கு உரை எழுதி வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து எண்ணற்ற நூல்களை வெளியிட்டு தமிழுக்கு அரும்பணியாற்றினார். இவ்வாறு ஏட்டு சுவடிகளைப் பதிப்பித்து நூலாக வெளியிட உ.வே.சா பட்ட இன்னல்கள் கணக்கில் அடங்காதவை.

1906-ஆம் ஆண்டு சென்னை அரசாங்கம் இவரது தமிழ்த் தொண்டைப் பாராட்டி “மகா மகோ பாத்யாயர்” என்ற பட்டத்தை வழங்கியது. 1932-ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகம் இவருக்கு “தமிழ் இலக்கிய அறிஞர்” என்ற விருதை வழங்கிக் கௌரவித்தது.

1942-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ஆம் நாள் இரு நூற்றாண்டைக் கண்ட பெருமிதத்தோடு இவ்வுலகை விட்டு மறைந்த போதிலும், காலமெல்லாம் வாழும் தமிழ்மொழிபோல் தமிழ்த் தாத்தாவாக என்றென்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.                      (குறள்:393)

கற்றவரே கண் உடையவர்; கல்லாதவரோ முகத்தில் இரண்டு புண்ணையே உடையவர்.

The learned are said to have eyes, but the unlearned have (merely) two sores in their face.

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.                            (குறள்:786)

பார்க்கும்போது மனம் மகிழாமல், முகம் மட்டுமே மலரப் பழகுவது நட்பு அன்று. அன்பால் மனமும் மலரப் பழகுவதே நட்பு.

The love that dwells (merely in the smiles of the face is not friendship; (but) that which dwells deep in the smiles of the heart is true friendship.

15. கப்பலோட்டிய தமிழன்

வ.உ.சி என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம்பிள்ளை ஒரு இந்திய விடுதலைப் போராட்ட வீரர். வ.உ.சிதம்பரம்பிள்ளை தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். அவர் அன்பு, தைரியம், வெளிப்படையான குணம் இவற்றை உடையவராக இருந்தார்.

 ஆறு வயதில் வீரப் பெருமாள் அண்ணாவி என்ற தமிழாசிரியரிடம் தமிழ் கற்றுக் கொண்டார். அவரது பாட்டியார் அவருக்கு சிவபுராணக் கதைகளைக் கூறுவார். அவரது பாட்டனாரிடம் இருந்து அவர் இராமாயணக் கதைகளையும், பாட்டனாரோடு சேர்ந்து சென்று அல்லிக் குளத்து சுப்ரமணிய பிள்ளை கூறிய மகாபாரதக் கதைகளையும் கேட்டறிந்தார்.

வ.உ.சி. ஒரு புகழ் பெற்ற வழக்கறிஞராக திகழ்ந்தார். அவர் வசதியற்றவர்களுக்காக இலவசமாக வாதாடினார். வழக்குகளுக்காக இடைத்தரகர்களுக்குப் பணம் கொடுப்பதை ஆதரிக்கவில்லை. வ.உ.சி. பெரும்பாலான வழக்குகளில் வெற்றி பெற்றார். சில வழக்குகளில் இரு கட்சியினரும் சமாதானமாகப் போகும்படி செய்தார். அவருடைய தகுதி, திறமை, நேர்மை இவற்றிற்காக நீதிபதிகளின் மதிப்புக்குரியவராக இருந்தார்.

ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வணிகம் செய்யவே வந்தனர். ஆனால் இந்திய ஆட்சியைக் கைப்பற்றி இந்திய நாட்டின் செல்வங்களை கொள்ளையடித்துக் கொண்டிருந்தனர். வ.உ.சி.யை இது கடுமையாகப் பாதித்தது. அவர் தனது எதிர்ப்பைத் தெரிவிக்க ஆங்கிலேயர்களின் வணிகத்தையே முதலில் எதிர்த்தார். “பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி”, இந்தியா, இலங்கை இடையே கப்பல்களை இயக்கிக் கொண்டு இருந்தது. அது ஆங்கிலேயர்களின் வணிகத்துக்கே முக்கியத்துவம் கொடுத்தது.

ஆதலால் வ.உ.சி. இந்தியர்களுக்காக ஒரு கப்பல் நிறுவனம் துவங்க தீர்மானித்தார்.அவர் பிரான்ஸில் இருந்து “எஸ்.எஸ். காலியோ” என்ற கப்பலுடன் திரும்பினார். இந்தியர்கள் அனைவரும் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

இந்திய செய்தித் தாள்கள் அனைத்தும் இது குறித்து கட்டுரைகள் வெளியிட்டு வ.உ.சி. அவர்களைப் பாராட்டின. கப்பல் நிறுவனம் மெதுவாக வளர்ந்தது. மக்கள் சுதேசிக் கப்பலிலேயே பயணம் செய்தனர். வணிகர்கள் தங்கள் சரக்குகளை சுதேசிக் கப்பலிலேயே அனுப்பினர். பிரிட்டிஷ் கப்பல் நிறுவனம் இந்தப் போட்டியைச் சமாளிக்க முடியாமல் கட்டணத்தைக் குறைக்க முடிவு செய்தது. கடைசியில் இலவசமாக அழைத்துச் செல்வதாகக் கூறியது.

பிரிட்டிஷ் கப்பல் நிறுவனத்தின் தந்திரம் குறித்து வ.உ.சி. மக்களிடையே விளக்கினார். சுதேசி கப்பல் நிறுவனத்தை அழித்த பிறகு அவர்கள் தங்கள் கட்டணத்தை விருப்பம் போல் ஏற்றிவிடுவார்கள். அப்போது இந்தியர்களால் ஒன்றும் செய்ய இயலாமல் போகும். அதனால் இந்தியர்கள் இலவசப் பயணத்தை மறுத்துவிட்டனர்.

ஆங்கிலேய அரசு அலுவலர்கள் என பலரும் பல விதமான தொல்லைகள் ஏற்படுத்தினர். ஆனால் சுதேசி கப்பல் நிறுவனத்தின் வளர்ச்சியை அவர்களால் தடுக்க இயலவில்லை. இதனால் இவர் “கப்பலோட்டிய தமிழன்” என்று அழைக்கப் பட்டார்.

சுதேசிக் கப்பல் நிறுவனத்தின் வளர்ச்சி ஆங்கிலயர்களை எரிச்சலூட்டிக் கொண்டிருந்தது. நூற்பாலை வேலை நிறுத்தத்தின் வெற்றி அவர்களை அச்சுறுத்தியது. இந்தியாவில் நிலைத்திருக்க வேண்டுமென்றால் வ.உ.சி.யைக் கைது செய்வது அவசியம் என்று உணர்ந்தார்கள். அவ்வாறே அவரைக் கைது செய்தார்கள்.

சிறையில் வ.உ.சி. கடுமையான வேலைகளைச் செய்தார். சணல் நூற்றார். அப்பொழுது அவரது உள்ளங்கைகளில் இருந்து ரத்தம் கசிந்தது. கல் உடைத்தார். மாடுகள் இழுக்கும் செக்கினை இழுத்தார். அந்தப் புகழ் பெற்ற வழக்கறிஞர் ஒரு மாடு போல உழைத்தார். அவரது எடை மிகவும் குறைந்தது. மருத்துவர் சிறையதிகாரியை எச்சரித்தார். உடனே அரிசி உணவு வழங்கப்பட்டது. பின்னர் சென்னை உயர் நீதிமன்றம் அவர் சொந்த உணவை உண்ணலாம் என்று கூறியது. இவ்வாறு வசதியான குடும்பத்தில் பிறந்து, இந்தியாவின் சுதந்திரத்திற்காக “செக்கிழுத்த செம்மலை” யாராலும் மறக்க முடியாது.

திருக்குறள்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.                               (குறள்:972)

எல்லா மக்களும் பிறப்பால் சமமே அவரவர் செய்யும் செயல் வேறுபாடுகளால் மட்டுமே பெருமை வரும்.

All human beings agree as regards their birth but differ as regards their characteristics, because of the different qualities of their actions.

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.                              (குறள்:66)

பெற்ற பிள்ளைகள் பேசும் பொருளற்ற மழலைச் சொல்லைக் கேட்காதவர்தாம், குழலும் யாழும் கேட்க இனியவை என்பர்.

“The pipe is sweet, the flute is sweet,” say those who have not heard the prattle of their own children.

07. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

‘நேதாஜி’ என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் ஒரு மாபெரும் இந்தியச் சுதந்திரப் போராட்டத் தலைவர் ஆவார். ‘இந்தியா உடனடியாகச் சுதந்திரம் அடைய வேண்டும், அதற்கு ஒரே வழி போர் மட்டுமே!’ என தீர்மானித்து இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி இந்தியாவை ஆட்சிசெய்து கொண்டிருந்த ஆங்கிலேயரை எதிர்த்து தாக்குதல் நடத்தியவர்.

1897 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23 ஆம் நாள் இந்தியாவின் ஒரிசா மாநிலத்திலுள்ள கட்டாக் என்ற இடத்தில் ஜானகிநாத் போஸுக்கும், பிரபாவதி தேவிக்கும் ஒன்பதாவது மகனாக பிறந்தார்.

இந்தியாவின் அம்ரித்சர் நகரில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில், ஆயுதம் ஏதுமின்றி கூட்டத்தில் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பாராமல் ஆங்கில அரசு, ‘ரெஜினால்ட் டையர்’ என்ற ராணுவ அதிகாரியின் தலைமையில் அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது. அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல், வெள்ளையர் ஆட்சி மீது சுபாஷ் சந்திர போஸிற்கு வெறுப்புணர்வை அதிகரித்தது. லண்டனில் ‘தன்னுடைய நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆங்கிலேயரிடம் வேலை செய்ய கூடாது’ என்று தன்னுடைய பணியை துறந்து இந்தியாவிற்குத் திரும்பி வரவும் செய்தது.

இந்தியா திரும்பிய சுபாஷ் சந்திர போஸ், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். சி.ஆர் தாசை அரசியல் குருவாக கொண்டு போராட்டத்தில் ஈடுபடவும் தொடங்கினார். “கொல்கத்தா தொண்டர் படையின்” தலைவராக பொறுப்பேற்று, தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்திய நேதாஜியை ஆங்கில அரசு கைது செய்தது.

சி.ஆர் தாஸ், அவர் “சுயாட்சிக் கட்சியை” தொடங்கியது மட்டுமல்லாமல், “சுயராஜ்ஜியா” என்ற பத்திரிக்கையையும் தொடங்கி நேதாஜி தலைமையின் கீழ் பொறுப்பையும் ஒப்படைத்தார்.

நேதாஜி, 1938 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டார். நேதாஜி அவர்கள், தலைவரானதும் ரவீந்திரநாத் தாகூர் அழைத்து, அவருக்குப் பாராட்டுவிழா நடத்தியதோடு மட்டுமல்லாமல், ‘நேதாஜி’ (மரியாதைக்கூரிய தலைவர் என்பது பொருள்) என்ற பட்டத்தையும் அவருக்கு வழங்கினார்.

1941 ஆம் ஆண்டு “சுதந்திர இந்திய மையம்” என்ற அமைப்பைத் தொடங்கிய நேதாஜி அவர்கள், சுதந்திர இந்திய வானொலியை பெர்லினில் இருந்து தொடங்கியதோடு மட்டுமல்லாமல், இந்திய விடுதலைப் போராட்டத்தை மையப்படுத்தியும் உலகப்போர் பற்றிய செய்திகளையும் இதில் ஒளிபரப்பினார்.

பிறகு, இந்திய தேசிய ராணுவத்திற்கு தீவீர பயிற்சி அளித்து அதனைத் தலைமையேற்றும் நடத்தினார். ஆனால் இந்திய தேசியப் படை, பல காரணங்களால் தோல்வியைத் தழுவி பின்வாங்கியது. அப்பொழுது ஆகஸ்ட் 15, 1945 ஆம் ஆண்டு நேதாஜி வானொலி மூலம் வீரர்களுக்கு “இந்த தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைந்துவிடாதீர்கள்! நம்பிக்கையுடன் இருங்கள், இந்தியாவை நிரந்தரமாக அடிமைத்தளத்தில் கட்டிவைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை” “ஜெய் ஹிந்த்” என உரையாற்றினார். அன்று அவர் குறிப்பிட்ட படியே சரியாக இரண்டு ஆண்டுகளில், அதாவது ஆகஸ்ட் 15, 1947 ஆம் ஆண்டு இந்தியா விடுதலைப் பெற்றது.

 “எனக்கு ரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரத்தை பெற்று தருகிறேன்” என கூறிய இந்திய புரட்சிநாயகன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆங்கிலேயரை எதிர்த்து, இராணுவ ரீதியாக போராடிய மாவீரன். இந்தியாவின் முதல் ராணுவத்தை கட்டமைத்து இந்தியர்களின் ஆயுதக் கையாளுமையை உலகறிய செய்தவர்.

மாபெரும் சாம்ராஜ்யத்தை அசைத்துப் பார்க்கும் அவர் முயற்சி சற்று பின்னடைவைச் சந்தித்தாலும், அவரது வீரம் என்றென்றும் நினைவு கூறத்தக்கது. சுதந்திர இந்தியாவிற்காக தன்னையே அற்பணித்துக் கொண்ட நேதாஜி அவர்கள், ஒவ்வொரு இந்தியனின் நெஞ்சிலும் இன்றும்  நீங்கா இடம் பெற்றிருக்கிறார்.

திருக்குறள்

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.                       (குறள்:110)

எத்தனை பெரிய அறங்களை அழித்தவர்க்கும் பாவத்தைக் கழுவ வழிகள் உண்டு. ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்து தீமை செய்பவனுக்கு வழியே இல்லை.

He who has killed every virtue may yet escape; there is no escape for him who has killed a benefit.

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.                           (குறள்:616)

முயற்சி செல்வத்தைச் சேர்க்கும்; முயலாமல் இருப்பது வறுமைக்குள் சேர்த்து விடும்.

Labor will produce wealth; idleness will bring poverty.

03. மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

மகாகவி என்று பெயர் பெற்ற சுப்பிரமணிய பாரதியார் ஒரு தமிழ்க் கவிஞர். இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். தன்னுடைய பாட்டுகளின் மூலமாகச் சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவர்.

இளமையிலேயே கவிபாடும் திறமை பெற்றிருந்த சுப்பிரமணியன், எட்டையபுர சமஸ்தானப் புலவர்கள் அவையில் பாரதி என்ற பட்டம் பெற்றார். அன்று முதல் இவர் “சுப்பிரமணிய பாரதியார்”என அழைக்கப்பெற்றார்.

இவர் செல்லம்மா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.  காசி இந்துக் கல்லூரியில் மெட்ரிகுலேஷன் தேர்ச்சி பெற்றார். பின்னர் அலகாபாத் சர்வகலாசாலையில் புதுமுகத் தேர்வில் முதன்மையாகத் தேர்வு பெற்றார். வடமொழியோடு இந்தியிலும் தேர்ச்சி பெற்றார்.

1903 ஆம் வருடம் எட்டையபுரம் மன்னர் அழைப்பிற்கிணங்க எட்டையபுரம் வந்தார். அரசவைக் கவிஞராகப் பணி புரிந்தார். பிறகு மதுரையில் சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். பின் அதனை விடுத்துச் சென்னையில் சுதேசமித்திரன் நாளிதழில் துணையாசிரியராகப் பணி புரிந்தார். மதுரையில் பாரதி எழுதிய பாடல் ‘விவேகபானு’ இதழில் வெளியானது.

பிறகு இந்தியா என்ற வார இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். உடன் Young India என்ற ஆங்கில இதழையும் பொறுப்பேற்று நடத்தினார். சூரத் காங்கிரஸ் மாநாட்டிற்குச் சென்றார். அங்கு திலகர், லாலா லஜபதிராய், அரவிந்தர் போன்றோரைச் சந்தித்தார்.

சுதேச கீதங்கள் என்ற முதல் நூலை வெளியிட்டார். தனது உணர்ச்சிமிக்க பாடல்களால் இந்தியா பத்திரிகையின் மூலமாக விடுதலைப் போராட்டத்தை நடத்தினார். அதனால் ஆங்கிலேயே அரசு பாரதியைக் கைது செய்ய ஆணை பிறப்பித்தது. நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பாரதி புதுவைக்குச் சென்றார்.

பாரதியின் இரண்டாம் கவிதைத் தொகுதியான ஜன்மபூமி வெளியானது. பாரதி,  கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திச்சூடி போன்ற கவிதை நூல்களை வெளியிட்டார். பகவத்கீதையைத் தமிழில் மொழிபெயர்த்தார். அதன் பிறகு சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.

அவர் தன்னுடைய 39-ம் வயதில் திருவல்லிக்கேணியில், கோயில் யானை, தாக்கியதால் நோய்வாய்ப்பட்டு இறந்தார். எனினும் அவரின் வீர உரைகளும், பாடல்களும் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.

அவர் நினைவாக எட்டயபுரத்தில் பாரதிக்கு மணிமண்டபமும், மைய மண்டபத்தில் மகாகவி பாரதியின் ஏழு அடி உயர திருவுருவச்சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.

அவர் குழந்தைகளுக்காக எழுதிய ஒரு பாடலைப் பார்ப்போம்:

ஓடி விளையாடு பாப்பா -நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா -ஒரு
குழந்தையை வையாதே பாப்பா

காலை எழுந்த உடன் படிப்பு
பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு
என்று வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா

சின்னஞ் சிறுகுருவி போலே – நீ
திரிந்து பறந்துவா பாப்பா
வண்ணப் பறவைகளைக் கண்டு – நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா

ஓடி விளையாடு பாப்பா -நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா -ஒரு
குழந்தையை வையாதே பாப்பா

திருக்குறள்

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.                                    (குறள்:45)

மனைவி பிள்ளைகளிடத்தில் அன்பும், தேடிய பொருளை நட்பு சுற்றங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அறமும் இருந்தால் இல்வாழ்க்கையின் பண்பும் அதுவே; பயனும் அதுவே.

If the married life possesses love and virtue, these will be both its duty and reward.

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
                      (குறள்:392)

வாழும் நல்லவர்க்கு அறிவியலும் கலைஇயலும் சிறந்த கண் என்று அறிந்தவர் கூறுவர்.

Letters and numbers are the two eyes of man.

15. ரோஜாவின் ராஜா – ஜவஹர்லால் நேரு

ரோஜாவின் ராஜா என்று அழைக்கப்படும் முன்னாள் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. குழந்தைகளைக் கண்டால் நேரு தானும் ஒரு குழந்தையாகவே மாறி அன்பு செலுத்துவார். இதனால்தான் அவருடைய பிறந்தநாள் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

தந்தை மோதிலால் நேரு, தாயார் சொரூபராணி, இவர்களின் மகனாக 1889-ம் ஆண்டு நவம்பர் மாதம் 14-ந்தேதி நேரு பிறந்தார். அலகாபாத்தில் அவருடைய குடும்பம் புகழ்பெற்ற வசதி படைத்த குடும்பமாகத் திகழ்ந்து வந்தது.

நேரு தனது 15-வது வயதில் இங்கிலாந்தில் பள்ளியில் சேர்க்கப்பட்டார். அங்கு ஹாரோ பள்ளியில் உயர்நிலை படிப்பை படித்த அவர் பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உள்ள டிரினிட்டி சட்டக்கல்லூரியில் பாரிஸ்டர் (வக்கீல்) பட்டம் பெற்றார். 1916-ம் ஆண்டு நேருவுக்கு கமலாபாயுடன் திருமணம் நடந்தது.

காந்தியின் தலைமையிலான சுதந்திர போராட்டம் அவரை ஈர்த்தது. 1920-ம் ஆண்டு நடந்த ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்தில் நேரு தீவிரமாகக் கலந்து கொண்டார். 1942-ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் நேரு தீவிரமாக ஈடுபட்டதால் அவர் கைது செய்யப்பட்டு 3 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். 1945-ல் விடுதலையாகி வெளியே வந்த அவர் மீண்டும் சுதந்திர போராட்டத்தில் தீவிரமாகக் கலந்து கொண்டார்.

இந்த போராட்டத்தின் விளைவாக 1947-ல் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. இந்தியாவின் முதல் பிரதமராக நேரு தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரதமர் பதவிக்கு வந்ததுமே நாட்டை எந்த வகையில் முன்னேற்றலாம் என்று திட்டம் தீட்டினார். இதற்காக, திட்டக் கமிஷன் என்ற அமைப்பை உருவாக்கினார். 

அறிவியல் தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்காக தொழில்நுட்பக் குழுவை அமைத்தார்.  ஐந்தாண்டு திட்டங்களை உருவாக்கினார். விவசாயமும், தொழில் துறையும் ஒரே சீராக வளர்ச்சியடைய அதற்கான பிரத்யேகத் திட்டங்களைக் கொண்டு வந்தார்.  தொழிற்சாலைகள்தான் இந்தியாவின் கோவில் என்று கூறிய அவர் பெரிய தொழிற்சாலைகள் பல உருவாவதற்குக் காரணமாக இருந்தார்.

இந்தியாவின் வளர்ச்சிக்கு அணுசக்தி மிகவும் அவசியம் என்று கருதிய அவர் அணுசக்திக் கழகத்தை உருவாக்கினார். உயர் தொழில்நுட்பக் கல்விகள் இருந்தால்தான் நாட்டை முன்னேற்ற முடியும் என்று நினைத்த அவர் அகில இந்திய மருத்துவக்கழகம், ஐ.ஐ.டி. கல்லூரி, இந்தியா வேளாண்மைக் கல்லூரி, தேசிய தொழில்நுட்பக் கல்லூரி போன்றவற்றை உருவாக்கினார்.

17 வருடம் தொடர்ந்து பிரதமராக இருந்து நாட்டை முன்னேற்றப் பாதைக்கு அழைத்து சென்ற நேரு 1964-ம் ஆண்டு மே மாதம் 27-ந்தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். இந்தியா இன்று உலக அளவில் தலைநிமிர்ந்து நிற்கிறது என்றால் அதற்கு நேரு அமைத்த அடித்தளம்தான் காரணம். குழந்தை மனம் படைத்த இதே நேருதான் ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்து நாட்டை விட்டே வெளியேற செய்தார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அவர் தினமும் தன் மேலாடையில் ஒரு ரோஜா பூ அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்ததால் “ரோஜாவின் ராஜா” என்று அன்புடன் அழைக்கப் படுகிறார்.

திருக்குறள்

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.                                     (குறள்:12)

நல்ல உணவுகளைச் சமைக்கவும், சமைக்கப்பட்ட உணவுகளை உண்பவர்க்கு இன்னுமோர் உணவாகவும் பயன்படுவது மழையே.

Rain produces good food, and is itself food.

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.                          (குறள்:70)

தன்னைக் கல்வி அறிவு உடையவனாய் ஆளாக்கிய தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறு, பிள்ளையின் ஒழுக்கத்தையும் அறிவையும் கண்டவர், இப்பிள்ளையைப் பெறுவதற்கு இவன் தகப்பன் என்ன தவம் செய்தானோ என்று சொல்லும் சொல்லைப் பெற்றுத் தருவதே.

(So to act) that it may be said “by what great penance did his father beget him,” is the benefit which a son should render to his father.

05. தேசத் தந்தை மகாத்மா காந்தி

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், 1869 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 02 ஆம் நாள், இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள “போர்பந்தர்” என்ற இடத்தில் கரம்சாந்த் காந்திக்கும், புத்திலிபாய்க்கும் மகனாகப் பிறந்தார்.

அவர் பள்ளியில் படிக்கும்போதே நேர்மையான மாணவனாக விளங்கினார். அவர் தன்னுடைய சிறு வயதில் அரிச்சந்திரா நாடகத்தைப் பார்த்து தானும் உண்மை பேசுவதைக் கடைப்பிடித்தார்.

தன்னுடைய 13 ஆம் வயதில் கஸ்தூரிபாயை திருமணம் செய்துகொண்டார். பதினெட்டு வயதில் ‘பாரிஸ்டர்’ எனப்படும் வழக்கறிஞர் கல்விக்காக இங்கிலாந்து சென்றார். தன்னுடைய வழக்கறிஞர் கல்வியை வெற்றிகரமாக முடித்து, பாரதம் திரும்பினார்.

1893 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவிற்கு பணிபுரியச் சென்றார்.  அப்போது தென் ஆப்பிரிக்காவில் நிறப் பாகுபாடு வெகுவாக நிலவியது. அவர் டர்பன் நகரிலுள்ள நீதிமன்றத்தில் தலைப்பாகை அணிந்து வாதாடக்கூடாது எனப் புறக்கணிக்கப்பட்டார்.  மற்றொரு நாள் பிரிட்டோரியா செல்வதற்காக, இரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்தபோது, ‘வெள்ளையர் இல்லை’ என்ற காரணத்தால் பயணம் செய்ய மறுக்கப்பட்டது.

தென்னாப்பரிக்காவில் கறுப்பின மக்கள் படும் இன்னலுக்கும், அங்கு குடியேறிய இந்திய மக்களுக்கும் உதவ இந்திய காங்கிரஸ் என்ற கட்சியினை தொடங்கினார்.  பிறகு அகிம்சை வழியில் நடைபெற்றப் போராட்டத்தில் கலந்துகொண்டு, அகிம்சை வழியில் தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்திய மக்களின் பிரச்சனையில் வெற்றிக் கண்டார் மகாத்மா காந்தி.

இந்திய விடுதலை இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல 1885 ஆம் ஆண்டு தொடங்கப் பட்ட  இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார். பின்னர் அதன் தலைவராகவும் தேர்தெடுக்கப்பட்டார்.

மாணவர்கள் கல்லூரிக்குச் செல்லாமல் இருப்பது, வழக்கறிஞர்கள் நீதி மன்றத்திற்கு செல்லாமல் இருப்பது, பிரிட்டிஷ்காரர்கள் தயாரிக்கப்பட்ட துணி மற்றும் பொருட்களை புறக்கணித்தல் என பெரும் தாக்கத்தை இந்தியா முழுவதும் ஏற்படுத்தினார். இந்த ஒத்துழையாமை இயக்கத்தின் வெற்றியால், காந்தி இந்திய தேசிய காங்கிரஸின் தனிப்பெரும் தலைவராக உருவெடுத்தார்.

1930 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு உப்புக்கு வரி விதித்தது. ஆனால், இதனை ஏற்க மறுத்த காந்தியடிகள், ‘தன்னுடைய நாட்டில் விளைந்த பொருளுக்கு அன்னியர் வரி விதிப்பதா?’ எனக் கருதி, சத்தியாகிர முறையில் இதை எதிர்க்க முடிவு செய்து, அகமதாபாத்திலிருந்து சுமார் 240 மைல் தூரத்தில் இருந்த தண்டியை நோக்கி நடைபயணம் மேற்கொண்டார். போராட்டம் தீவிரம் அடைவதைக் கண்ட ஆங்கில அரசு, வேறு வழியில்லாமல் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் விதித்த உப்புவரியை திரும்பப் பெற்று கொண்டனர்.

1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஆங்கில அரசுக்கு எதிராக ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தினை காந்தி தொடங்கி வைத்தார். காந்தியின் மன உறுதியையும், அகிம்சை பலத்தையும் கண்ட ஆங்கில அரசு திகைத்தது. இறுதியில் காந்தியின் இடைவிடாத போராட்டத்தால், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியா சுதந்திரம் அடைந்தது.

அகிம்சை என்னும் வார்த்தைக்கு அர்த்தம் சொன்ன மகாத்மா காந்தி அவர்கள், 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் நாள் புது தில்லியில் நாதுராம் கோட்சே என்னும் கொடியவனால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பாரத நாட்டிற்காக தன்னுடைய உயிரையும் காணிக்கையாக்கிய மகாத்மாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் போராட்டங்கள் உலக சரித்திரத்தில் எழுதப்பட்ட அழியாச் சுவடுகள் ஆகும்.

திருக்குறள்

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.                           (குறள்:595)

நீர்ப்பூக்களின் அடிக்காம்பின் நீளம் நீரின் அளவே. அது போல மக்களின் உயர்வும் அவர்களின் மன ஊக்கத்தின் அளவே.

The stalks of water-flowers are proportionate to the depth of water; so is men’s greatness proportionate to their minds.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.                                 (குறள்:10)

கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார்.

None can swim the great sea of births but those who are united to the feet of God.

01. சாதனைப் பெண் – அன்னை தெரஸா

கருணையின் மறுபெயர் “அன்னை தெரஸா”.  நீலநிறக் கரை போட்ட வெள்ளைக் கைத்தறிச் சேலை. சுருக்கங்கள் நிறைந்த முகம். இன, மத, இட வேறுபாடற்ற சேவை மனப்பாங்கு.

இவர் 1910 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26-ம் தேதி மெஸிடோனியாவில் பிறந்தார். அல்பேனிய இனத்தவரான இவரது இயற்பெயர் அக்னஸ் கொன்ஸா பொஜாக்கியூ (Agnes Gondza Bojadziu) என்பதாகும். அல்பேனிய மொழியில் Gondza என்பதன் பொருள் ரோசா மொட்டு அல்லது சின்னஞ்சிறு மலர் என்பதாகும்.

இவர் சிறுவயது முதல் ஆழ்ந்த இறைப்பக்தியும் பொதுத் தொண்டில் மிகுந்த ஆர்வமும் கொண்டவர். தனது 18 ஆவது வயதில் ஐரிஷ் கன்னிகாஸ்திரிகளைக் கொண்ட லொரேட்டா கத்தோலிக்க கன்னிகா மடத்தின் உறுப்பினரானார். கல்கத்தாவில் இந்திய மிஷனரிகள் செய்துவந்த சமூகத் தொண்டுகளால் அவர் பெரிதும் ஈர்க்கப்பட்டார். எனவே, டப்ளினில் சில மாதங்கள் பயிற்சி பெற்றபின் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டார்.

அதன்பின் ஆன்மீகக் கல்வியைத் தொடர்வதற்காக  அயர்லாந்து சென்றார். 1931 ஆம் ஆண்டு ஞானஸ்நானம் பெற்று அன்னை தெரசாவானார். அன்னை தெரசா 1931லிருந்து 1948-ஆம் ஆண்டுவரை கல்கத்தா புனித மேரி உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தார். 1948 ஆம் ஆண்டு பாட்னாவில் மருத்துவத் தாதிப் பயிற்சியைப் பெற்றார். 1949 இல் மோதிஜில் என்ற சேரிப்பகுதியை அடைந்து, “உங்களுக்குத் தொண்டு செய்யவே நான் இங்கு வந்துள்ளேன். உதவி செய்ய என்னை அழைப்பீர்களா?” என்று கேட்டவாறு சுற்றுப்புறத்தைச் சுத்தம் செய்யத் தொடங்கினார்.

1950 அக்டோபர் 7 லில் அன்னை தெரசாவின் தலைமையில், மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி இல்லம் (Missionaries of Charity) தொடங்கப்பட்டது. 1965 இல் இந்த அமைப்பு சர்வதேச அளவில் அறியப் பெற்றது.

சேரிவாழ் ஏழை மக்களுக்கும் அநாதைகளுக்கும் தொழு நோயாளர்களுக்கும் அவர் செய்துவந்த தொண்டுகள் அளவிட முடியாதவை. ஏழை நோயாளர்களுக்கு வெறுமனே உபதேசம் செய்பவராக மட்டும் அன்னை தெரசா இருக்கவில்லை. மாறாக, அவர்களுடன் இணைந்து தமது வாழ்நாட்களை எல்லாம் அவர்களுக்காகவே செலவிட்டவர்.

1962 ஆம் ஆண்டு பொதுச் சேவைக்கான இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது அன்னை தெரசாவுக்கு வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி, 1979-ல் அமைதிக்கான நோபல் பரிசும் அவருக்கு வழங்கப்பட்டது. அவரின் இடையுறாத சமூகத்தொண்டை கௌரவிக்குமுகமாக 1980 இல் இந்தியாவின் அதிஉயர் விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

1983 இல் எலிசபெத் மகாராணியின் கௌரவ விருதும் அன்னை தெரசாவைத் தேடி வந்தது. 1997 ஆம் ஆண்டு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் அமெரிக்காவின் கௌரவ பிரஜை உரிமை அந்தஸ்தை வழங்கி அன்னை தெரசாவைக் கௌரவித்தார்.

சுமார் 45 வருடகாலம் சமூகப் பணிகளில் மிகுந்த அர்ப்பணிப்போடு ஈடுபட்டுவந்த அன்னை தெரசா 1983 ஆம் ஆண்டு இதய நோயால் பாதிக்கப்பட்டார். 1997 செப்டெம்பர் 05 ஆம் தேதி கல்கத்தாவில் உயிர் நீத்தார். பொதுத் தொண்டுக்காகவே தம்முடைய வாழ்நாளை அர்ப்பணித்த பெண்மணியான அன்னை தெரசா உலகின் சாதனைப் பெண்களில் ஒருவர் என்பதை நாம் யாரும் மறுக்க முடியாது.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.                                             (குறள்:1)

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; அது போல உலகம் கடவுளில் தொடங்குகிறது.

As all letters have the letter A for their first, so the world has the eternal
God for its first.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.                                   (
குறள்:72)

அன்பு இல்லாதவர் எல்லாவற்றாலும் தமக்கே உரிமை உடையவராய் இருப்பர். அன்புள்ளவரோ பொருளால் மட்டும் அன்று; உடம்பாலும் பிறர்க்கு உரியவராய் இருப்பர்.

Those who are destitute of love appropriate all they have to themselves; but those who possess love consider even their bones to belong to others.