25. தமிழ்ப் புத்தாண்டு

உங்கள் எல்லோருக்கும் தமிழ் மாதங்களை வரிசையாகச் சொல்லத் தெரியுமா?  அவைகள்: சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி. இதில் தமிழ் வருடத்தின் முதல் மாதம் சித்திரை. சித்திரையின் முதல் நாள் புத்தாண்டு தினமாகக் கொண்டாடப்படுகிறது. 

வருடத்தின் முதலாக வசந்தகாலம் வந்தால் வருடம் முழுவதும் மக்கள் வாழ்வில் வசந்தகாலம் தங்கும் என்று உணர்ச்சி பூர்வமாக முடிவெடுத்து சித்திரையைத் தமிழ் ஆண்டின் தொடக்க மாதமாக வைத்தனரோ? தமிழ் நாட்டில் கோலாகலமான கோயில் விழாக்கள் பெரும்பாலும் சித்திரை, வைகாசி மாதங்களில் அதாவது, வசந்தகாலத்திலேயே கொண்டாடப்படும். அது இயற்கை செழிக்கத் துவங்கும் காலம். அப்போதுதான் மக்களுக்கு மனதில் மகிழ்ச்சியோடு பக்தியும் பெருகும்.

தமிழ்ப் புத்தாண்டு அன்று அறுசுவை உணவு மிகவும் முக்கிய இடம் வகிக்கிறது. இனிப்பு, கரிப்பு, எரிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு இந்த எல்லாச் சுவைகளும் சேர்ந்தது தான் வாழ்க்கை என்பதைக் காட்டும் வகையில் அன்று வீடுகளில் விருந்து தயாரிக்கப்படுகிறது. பருப்புப் பாயசம், தயிர்ப் பச்சடி, இனிப்பும், கசப்பும், காரமும் சேர்ந்த மாங்காய்ப் பச்சடி, வாழைக்காய்ப் பொரியல், எல்லாக் காய்களும் போட்ட கூட்டு அல்லது அவியல், கிழங்குகள் போட்டு சாம்பார் அல்லது சேப்பங்கிழங்கும் பூசணிக்காயும் போட்ட மோர்க்குழம்பு, வேப்பம் பூ ரசம், பருப்பு வடை இவை பெரும்பாலும் சமையலில் இடம் பெற்றிருக்கும்.

தலைவாழை இலையில் மேற்கூறிய உணவுப் பொருட்களை வைத்து கடவுளுக்கு நிவேதனம் செய்வார்கள். அன்று சிவ-விஷ்ணு வழிபாடு செய்வதும், விஷ்ணு சகஸ்ரநாமம், திருப்பதிகம் படிப்பதும் மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. புதிய பஞ்சாங்கத்தினை சுவாமி அறையில் வைத்து வணங்குவதும் சிலரது வழக்கம்.

நமது அண்டை மாநிலமான கேரளாவில் அன்று கனி காணல் என்றொரு பழக்கம் இருக்கிறது. புத்தாண்டு துவங்குவதற்கு முன் தினம் இரவு, பூஜை அறையை சுத்தம் செய்து எல்லா தெய்வப் படங்களுக்கும், பூ வைப்பார்கள். ஒரு கண்ணாடியை வைத்து அதன் முன்னால், கனிவகைகள் ஒரு தட்டில், காய் வகைகள் ஒரு தட்டில், அரிசி மற்றும் பருப்பு ஒரு தட்டில், பணம் ஒரு தட்டில், தங்க நகைகள் ஒரு தட்டில், கொன்றை பூக்கள் ஒரு தட்டில் என கடவுள் படத்தின்  முன்னால் வைப்பார்கள்.

மறுநாள் விடியலிலேயே குடும்பத்தின் பெரியவர் விழித்துக் கொண்டு தன் கைகளால் கண்களை மூடிக் கொண்டு அந்த பூஜையறையில் வைத்திருக்கும் தட்டுகளிலும், கடவுள் படங்களிலும் கண் விழிப்பார். பின்னர் குளித்து சுத்தமான பட்டுத் துணி உடுத்தி, மற்ற குடும்ப அங்கத்தினர்களை எழுப்பிக் கண்களைப் பொத்தியவாறு அழைத்து வந்து தெய்வங்களையும் அந்தத் தட்டுகளையும் முதலில் காண வைப்பார்கள்.

இதற்கு கனி காணல் என்று பெயர். அவ்வாறு செய்தால் அந்த ஆண்டு முழுவதும் நல்ல செழிப்புடனும், செல்வ வளத்துடனும் திகழும் என்று நம்பிக்கை. வீட்டில் பழங்கள் தானியங்களுக்குக் குறைவிருக்காது என்பது ஐதீகம். நெல்லை, கன்யாகுமரி மாவட்டத்தில் கேரளாவை ஒட்டிய பகுதிகளில் வாழும் தமிழர்களும் இப்பழக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். தமிழர்களாகிய நாமும், இந்தத் தமிழ்ப்புத்தாண்டு நன்னாளை மிகக் கோலாகலமாகக் கொண்டாடி மகிழ்வோம். ஆறு சுவையுடைய பொருட்களை இறைவனுக்குப் படைத்து எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும், வாழ்க்கையில் இனிமையே மிகுந்து இருக்க வேண்டும் என்று வேண்டிடுவோம். ஆண்டின் துவக்கத்தில் ஆண்டவனை வேண்டினால், வருடம் முழுதும் வாழ்க்கை வசந்தம் போலவே இருக்க அருள் புரிவான் இறைவன்.

திருக்குறள்

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.                                (குறள்:67)

தகப்பன் தன் பிள்ளைக்குச் செய்யும் நன்மை, கற்றவர் அவையில் முதன்மைப் பெறச் செய்வதே.

The benefit which a father should confer on his son is to give him precedence in the assembly of the learned.

இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்.                       (குறள்:1040)

நிலமகள் என்னும் நல்ல பெண், நாம் ஏதும் இல்லாத ஏழை என்று சோம்பி இருப்பவரைக் கண்டால் தனக்குள் ஏளனமாய்ச் சிரிப்பாள்.

The maiden, Earth, will laugh at the sight of those who plead poverty and lead an idle life.

07. கார்த்திகைத் திருநாள்

கார்த்திகைத் தீபம் தமிழ் மக்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. இந்தத் தீபத் திருநாளில் வீடுகளில், ஆலயங்களில் தீபங்களை ஏற்றி வழிபடுவது தமிழர்களின் மரபு. குத்து விளக்கில் இருக்கும் ஐந்து முகங்களையும் ஏற்றி வைத்தால் அந்த இடம் இலட்சுமிகரமாக இருக்கும். ஐந்து முகங்களையும் பெண்களின் மன உறுதி, நிதானம், சமயோசித புத்தி, சகிப்புத் தன்மை, அன்பு ஆகியவற்றிற்கு ஒப்பிடுவார்கள்.

கார்த்திகை மாதம் பௌர்ணமி தினத்தன்று இப்பண்டிகைக் கொண்டாடப்படுகின்றது. ஆதிகாலம் தொட்டே மக்கள் அக்னியைத் தெய்வமாகக் கொண்டாடி வந்தனர். அந்த அடிப்படைக் காரணத்தால் தான் பெரும்பாலும் நம் பண்டிகைகளில் தீபங்களை ஏற்றிவைத்துக் கொண்டாடுகின்றோம். பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்னியைத் மகிழ வைப்பதுதான் இப்பண்டிகையின் நோக்கமாகும்.

கார்த்திகை மாதம் முதல் தேதி தொட்டு கடைசி நாள் வரை தினமும் மாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றி வைத்துக் கொண்டாடுவர். கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில்தான் திருக்கார்த்திகைப் பண்டிகை கொண்டாடப்பட வேண்டும்.

நம் தென்னிந்தியாவில் ஒவ்வொரு பண்டிகைக்கும் பண்டிகை சமையல்கள் உள்ளன. காலையில் பண்டிகைச் சமையலாக, பருப்புருண்டை மோர்குழம்பு, பொரித்த அப்பளம், வடகம், தக்காளி ரசம், காரட் கோசுமரி, மோர் செய்வார்கள். மாலையில் நிவேதனம் செய்ய, வடை,  அப்பம், நெல் அவல் பொரி உருண்டை, தேன்குழல், வெல்ல அடை, கார அடை, அவியல் செய்வது வழக்கம்.

தீபத் திருவிழா என்றதுமே நம் நினைவில் வந்து நிற்பது திருவண்ணாமலை திருத்தலம்தான். திருவண்ணாமலை கார்த்திகை தீபம் தமிழ்நாட்டில் நடைபெறும் மிகப்  பெரிய உற்சவங்களில் ஒன்று. இவ்விழா பதினேழு நாட்களுக்கு மகா உற்சவமாக் கொண்டாடப்படுகிறது.

திருவண்ணாமலையில் குன்றின் சிகரத்தில் ஏற்றப்படும் ஜோதியானது, உலகம் முழுதும் உள்ள அஞ்ஞான இருளை அகற்றி மெய்ஞான ஒளியைப் பரப்பும் என்று நம்பப்படுகிறது.

திருவண்ணாமலை மீது காணப்படும் பெரும் செப்புக் கொப்பரையில் இருபத்து நான்கு முழம் துணி திரியாகப் போடப்படும். கற்பூரத்தூள் சேர்த்துத் திரி சுற்றப்பட்டிருக்கும். நெய் ஊற்றி தீபத்தை ஏற்றுவார்கள்.

இந்த ஜோதியின் காரணமாகத்தான் மற்ற இடங்களில் சொக்கப்பனை கொளுத்தும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கோவிலுக்கு முன்னால் பனை மரத்தைத் தரையில் ஊன்றி அதனுள் பனை ஓலையயும் வெடிகளையும், வண்ண மத்தாப்புக்களையும் கட்டி வைத்துக் கொளுத்துவர்.

இவ்வாறு பெருமையும் மேன்மையும் கொண்ட கார்த்திகைத் திருநாளை திருச்செங்கோடு, வேதாரண்யம், பழனி, திருச்செந்தூர் முதலிய கோயில்களில் திருவண்ணாமலைக் கோயிலைப்போன்றே கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.

திருக்குறள்

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.                    (குறள்:151)

தன்னையே தோண்டினாலும் தோண்டுபவர் விழுந்துவிடாதபடி தாங்கும் நிலம் போலத், தன்னை வார்த்தைகளால் அவமதிப்பவரையும் மதித்துப் பொறுப்பது முதன்மை அறம்.

To bear with those who revile us, just as the earth bears up those who dig it, is the first of virtues.

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.                      (குறள்:427)

அறிவுடையார் நாளை வர இருப்பதை முன் அறிய வல்லவர்; அறிவு இல்லாதவரோ அதனை அறிய இயலாதவர்.

The wise are those who know beforehand what will happen; those who do not know this are the unwise.

13. தமிழர் திருநாள் – பொங்கல் பண்டிகை

தமிழர் திருநாளாம் “பொங்கல் பண்டிகை’ என்றதுமே தமிழர்களின் நெஞ்சமெல்லாம் மகிழ்ச்சியில் தாண்டவமாடும். அந்த அளவுக்கு அனைத்துத் தரப்பினராலும் ஆனந்தத்தோடு கொண்டாடப்படுவது பொங்கல் திருநாள். இது தொடர்ச்சியாக நான்கு நாட்கள் கொண்டாடப்படுகின்றது. குறிப்பாக கிராமங்களில் உழவர்கள் அறுவடை முடித்தவுடன் இந்தப் பண்டிகை வருவதால் இது “உழவர் திருநாளாகவும்” கொண்டாப்படுகிறது.

பொங்கலின் முதல் நாள் போகிப் பண்டிகை. மழை பெய்தால்தான் பயிர்கள் செழிக்கும்! உயிர்கள் வாழும்! எனவே பண்டைய நாட்களில் வருணனின் அதிபதியான இந்திரனை “போகி’யன்று பூஜிக்கும் வழக்கமிருந்தது. தற்போது, “பழையன கழிதலும், புதியன புகுதலும்’ என்ற வகையில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

பொங்கலுக்கு முன்னரே வீட்டை வெள்ளையடித்துச் சுத்தம் செய்வார்கள். அப்போது தேவையற்ற பழைய பொருட்களை ஓரத்தில் ஒதுக்கி வைப்பார்கள். போகியன்று அந்தப் பழைய பொருட்களைத் தீயிலிட்டுக் கொளுத்துவது வழக்கம். அப்போது குழந்தைகள், சிறு பறை கொட்டிக் குதூகலிப்பர்.

இரண்டாம் நாள் பொங்கல் பண்டிகை, அறுவடையான புத்தரிசியை மண் பானையில் வைத்து சர்க்கரைப் பொங்கல் செய்வது மரபு. பெரும்பாலும் கிராமப்புறங்களில், வாசலிலே வண்ணக் கோலமிட்டு, அதன் நடுவே பொங்கல் பானையை வைத்து, பானையின் கழுத்தில் மஞ்சள் கிழங்கை இலையோடு கட்டி, மணம் பரப்பும் பொங்கல் சோறு பொங்கியெழும்போது, “பொங்கலோ பொங்கல்’ என்று கூவி மகிழ்வார்கள்.

இப்படித் திறந்த வெளியில் பொங்கல் வைப்பதால், சூரிய பகவான் அதை நிவேதனமாக ஏற்று மகிழ்கிறார். இதற்காக கூடவே கரும்பும் வைத்து, கடவுளுக்குப் படைப்பார்கள். பொங்கலுக்கு புதிய ஆடைகள் அணிவார்கள்.

மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல். கால்நடைகளே நமது நாட்டில் செல்வத்தின் அடையாளமாக ஒரு காலத்தில் திகழ்ந்தன. உழவர்களுக்கு உதவும் மாடுகளைக் கடவுளாகவே கருதி வழிபடுவதுதான் மாட்டுப் பொங்கலின் தத்துவம்.  மாட்டுப் பொங்கலன்று பசுக்களுக்கு மஞ்சள் பூசி, திருநீறிட்டு, குங்குமம் வைத்து, மாலை போட்டு வணங்குவர். அதன் பசிக்குத் தேவையான உணவையும் படைப்பர்.

காளைகளுக்கு கொம்புகளில் வர்ணம் பூசி, காலில் சலங்கை கட்டி, “வீர நடை” நடக்க வைப்பர். பல வீடுகளில் அன்று காளை மாடுகளுக்கு “அங்கவஸ்திரம்” போர்த்தி, மரியாதை செய்வார்கள். ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டின் நாயகர்களும் காளைகளே. மாட்டுப் பொங்கலன்று திருவள்ளுவர் தினமும் கொண்டாடப் படுகிறது.

நான்காம் நாள் காணும் பொங்கல். பெண்கள் தங்கள் சகோதரர்களின் நலனுக்காகச் செய்வது “கனு” பொங்கல். அன்று காலை நீராடி, வெறும் வயிற்றுடன், வெட்ட வெளியில் சூரியக் கோலமிட்டு, அதில் பொங்கல், கரும்பு போன்றவற்றை வைத்து, ஆதவனுக்கு அர்ப்பணிப்பார்கள்.

“காணும் பொங்கல்’ அன்று புத்தாடை அணிந்து சுற்றத்தாரையும், நண்பர்களையும் பார்த்து அளாவி மகிழ்வது வழக்கம். சிலர் இன்பச் சுற்றுலாவும் சென்று களிப்பர். பொங்கல் அன்று எல்லாரும் மகிழ்சியாக வாழ “பொங்கல் தின வாழ்த்துக்களை” பகிர்ந்து  கொள்வார்கள். தமிழ் நாட்டில் புது திரைப் படங்கள் பொங்கல் அன்று வெளியிடப்படுவது  மக்களை மேலும் மகிழ்விக்கின்றது.

திருக்குறள்

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.
                          (குறள்: 428)

பயப்பட வேண்டியதற்குப் பயப்படாமல் இருப்பது மூடத்தனம்; பயப்பட வேண்டியதறிந்து  பயப்படுவது அறிவாளிகளின் வேலை.

Not to fear what ought to be feared, is folly; it is the work of the wise to fear what should be feared.

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.
                                (குறள்: 435)

தனக்கு ஒரு குற்றம் வருவதற்கு முன்பே வராமல் காத்துக் கொள்ளாத அரசு, நெருப்பிற்குமுன் வைக்கப்பட்ட வைக்கோல் போல அழிந்துபோகும்.

The prosperity of him who does not timely guard against faults, will perish like straw before fire.

05. நவராத்திரி விழா

அம்மனுக்குரிய பண்டிகைகளில் தலைசிறந்தது ஒன்பது நாட்கள் கொண்டாப்படும் நவராத்திரி விழா. புரட்டாசி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாளில் நவராத்திரி தொடங்குகின்றது. ஒன்பது நாட்களுடன் ஒரு நாளைச் சேர்த்து தசராவாக,  பத்துநாள் திருவிழா கொண்டாடப்படுகிறது.

நவராத்திரி வழிபாடு பெரும்பாலும் பெண்களுக்கே உரியது. நவராத்திரி வழிபாட்டால் பெண் குழந்தைகள், கன்னிப்பெண்கள், சுமங்கலிகள் எல்லாரும் மனமகிழ்ச்சி பெறுகிறார்கள். நவராத்திரி விழாவில் இரவு நேரத்தில் தான் பூஜை செய்யப்படும்.

நவராத்திரியின் முதல் ஒன்பது நாட்களில் முதல் மூன்று நாட்கள் துர்க்கையின் வழிபாடு. இடை மூன்று நாட்கள் லட்சுமி வழிபாடு. கடை மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடு.

துர்க்கை, மகிஷன் என்ற அசுரனுடன் ஒன்பது இரவுகள் போரிட்டாள். இவையே ‘நவராத்திரி ‘ எனப்படும்.

அவனை வதைத்த பத்தாம் நாள் ‘ விஜயதசமி’. விஜயம் என்றால் வெற்றி. வங்காளத்தில் துர்க்கா பூஜை என்ற பெயரோடு கொண்டாடுகிறார்கள். பத்தாவது நாளான விஜய தசமி அன்று புதிய கல்வி கற்பதைத் தொடங்குவார்கள்.

துர்க்கை, வீரத்தின் தெய்வம். இலட்சுமி செல்வத்தின் தெய்வம். சரஸ்வதி கல்வியின் தெய்வம். குழந்தைகள் கல்வியினை விஜய தசமி அன்று ஆரம்பிப்பார்கள். இன்று தொடங்கும் அனைத்து நற்காரியங்களும் வெற்றி தரும் என்ற நம்பிக்கை உண்டு.

நவராத்திரி என்றால் கொலுதான் முக்கிய அம்சம் பெறுகிறது. பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகியோரின் பொம்மைகள் கண்டிப்பாக இருக்க வேண்டும். முழுமுதற் கடவுளான விநாயகர் பொம்மை இடம் பெறுவதும் சிறப்பு. அது மட்டுமின்றி பல்வேறு பொம்மைகளையும் கொலுவில் வைத்து அழகுபடுத்தலாம். கொலுவில் வைக்க பல்வேறு அம்சத்தை விளக்கும் வகையில் பொம்மைகள் வைப்பார்கள்.

வீடுகளில் பெண்கள் கொலுவைத்து உறவினர்களையும், அண்டை வீட்டில் உள்ள பெண்களையும் வரவழைத்து, தேவியர் பெருமைகளை உணர்த்தும் பாடல்களைப் பாடி சிறப்பு பூஜைகள் செய்து, பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு, தாம்பூலம் வழங்கி இவ் விரதத்தை கொண்டாடுவது வழக்கமாகும்.

ஒவ்வொரு நாளும் அம்பாளுக்கு நெய்வேத்தியமாக சர்க்கரைப் பொங்கல், தயிர்ச்சாதம், வெண்பொங்கல், எலுமிச்சை சாதம், புளியோதரை, தேங்காய்ச்சாதம், கற்கண்டுச் சாதம், அக்கர வடசல், பல்வேறு சுண்டல் வகைகள் செய்து படைப்பார்கள். பிறகு எல்லாருக்கும் கொடுத்து மகிழ்வார்கள்.

வட இந்தியாவில் பத்து நாட்களுக்கு ஒவ்வொரு இரவிலும் திறந்த வெளி மைதானத்தில் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் கலந்து ‘தாண்டியா’ என்னும் ஒருவகை நடனம் ஆடிக்  கொண்டாடுவார்கள். இது நமது ஊரில் ஆடும் கோலாட்டம் போல இருக்கும்.

நவராத்திரி இந்தியா முழுவதிலும் கொண்டாடப்படும் ஒரு குதூகலம் நிறைந்த ஒரு கொண்டாட்டம் ஆகும். இது எல்லா வயது மனிதர்களுக்கும் புத்துணர்ச்சியையும், சக்தியையும் சந்தோஷத்தையும், சமூக ஈடுபாட்டையும் தருகிறது.  

திருக்குறள்

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.                            (குறள்:15)

பெய்யாமல் மக்களைக் கெடுப்பதும்; பெய்து கெட்டவரைத் திருத்துவதும் எல்லாமே மழைதான்.

Rain by its absence ruins men; and by its existence restores them to fortune.

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர்.                              (குறள்:997)

மனிதப்பண்பு இல்லாதவர்கள் அரம் போல அறிவுக்கூர்மை படைத்தவர் என்றாலும் ஓர் அறிவு படைத்த மரத்தைப் போன்றோரே.

He who is destitute of (true) human qualities (only) resembles a tree, though he may possess the sharpness of a file.

13. கிறிஸ்துமஸ் பண்டிகை

கிறிஸ்துமஸ் பண்டிகை கிறிஸ்து மரத்தை அலங்கரிப்பதில் தொடங்குகிறது. ஃபர் மரங்களைக் கிறிஸ்துமஸுடன் இணைத்துக் கொண்டாடிய புகழ் ஜெர்மனியரையே சாரும். கி.பி.எட்டாம் நூற்றாண்டு அளவில் போனியாஸ் என்ற கிறிஸ்தவ பாதிரியார், ஜெர்மனிக்கு இறைச் சேவைக்காக வந்தார். ஒரு கிறிஸ்துமஸ் நாளில் இவர் ஒரு ஃபர் மரத்தை ஆசீர்வதித்து குழந்தை இயேசுவுக்கு அதைக் கொடுத்தார். அன்று முதல் ஃபர் மரம் கிறிஸ்துமஸ் மரம் ஆனது. அதிலிருந்து ஒவ்வொரு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போதும் இம்மரம் வீடுகளில் நடப்படுகிறது.

1841 ஆம் ஆண்டில் ஜெர்மானிய இளவரசர் அல்பட், இங்கிலாந்து அரண்மனையில் ஒரு கிறிஸ்துமஸ் மரத்தை நட்டு, அதில் பல பரிசுப் பொருள்களைப் கட்டித் தொங்க விட்டார். மரத்தைச் சுற்றிலும் மெழுகுவத்திகளை ஏற்றி வைத்தார். பின்பு இப்பரிசுப் பொருள்களைப் பலருக்கும் வழங்கினார். இதன் பின்னரே கிறிஸ்துமஸ் மரம் இங்கிலாந்து முழுவதும் அமைக்கப்பட்டது. இத்தாலியில் இம்மரத்தைச் சுற்றிலும் வண்ண வண்ண மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்து பாடல்களைப் பாடி மகிழ்கின்றனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது கிறிஸ்துமஸ் தினத்திற்கு முன்பாகவே எல்லோர் வீடுகளிலும் பெரிய நட்சத்திரம் தொங்க விடுவர். இயேசு கிறிஸ்து பிறந்தபோது அதனை அறிவிக்கும் படியாக விண்ணில் வால் நட்சத்திரம் ஒன்று தோன்றியது. எனவேதான் இந்த ஸ்டார் அமைக்கும் பழக்கம் வந்தது.

அப்போது ஆயர்கள் ஆடுமேய்த்துவிட்டு இரவில் தூங்கிய போது வானில் இருந்து தேவதை ஒன்று தோன்றி, பயப்படாதீர்கள் உங்களுக்கெல்லாம் மிகுந்த சந்தோஷத்தை கொடுக்கும் செய்தி ஒன்றை சொல்கிறேன். மக்களின் பாவத்தை போக்க கிறிஸ்து என்னும் ரட்சகன் பிறந்துள்ளார் என்று அறிவித்தார்.

அதன் பிறகு அவர்கள் இயேசு குழந்தையைக் கண்டு வணங்கி மகிழ்வுற்றனர். இவற்றை நினைவு கூறும் வகையில்தான் குடில்கள் அமைத்து, நட்சத்திரங்களை தொங்கவிட்டு, பரிசுபொருள்கள் கொடுத்து தங்கள் சந்தோஷத்தை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்கின்றனர்.

இன்றும் எதியோப்பியாவில் ஒவ்வொரு மாதமும் கிறிஸ்துமஸ் கொண்டாடுகின்றனர். மார்ச் மாதத்தில் மட்டும் விருந்துக்கு பதிலாக உபவாசம் இருக்கின்றனர். பால், வெண்ணெய், இறைச்சி, மீன் முதலியவற்றை உண்ணாமல் இருக்கின்றனர்.

ஸ்கண்டிநேவியாவில் கிறிஸ்துமஸ் விழாவை பறவைகளுக்கு விருந்தளிப்பதன் மூலம் கொண்டாடுகின்றனர். கோதுமைக் கதிர்களைத் தூண் போலக் கட்டி வயல்வெளியில் வைத்து விடுகின்றனர். இதன் கீழேயும் தானியங்களைப் பரப்பி வைத்திருப்பர்.

ஆஸ்திரேலியாவில் கிறிஸ்துமஸ் விழா பழக்கம் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். மற்ற நாடுகளில் எல்லாம் இந்த நேரத்தில் பனி மூடிக் கிடக்கும். ஆகவே, அதை வயிட் (white) கிறிஸ்துமஸ் என்று அழைப்பர். ஆனால், ஆஸ்திரேலியாவிலோ இது அவர்களுக்கு, வேனில் காலத்தின் இடைப்பகுதி. ஆகவே, கிறிஸ்துமஸ் நாளை சுற்றுலா சென்றும் மிகழ்ச்சியாக செலவழிக்கின்றனர்.

அயர்லாந்து நாட்டினர் கிறிஸ்துமஸ் தினத்திற்கு முந்தின இரவு ஜன்னல் ஓரங்களில் விளக்குகளை எரியவிடுவர். யோசப்பும், மரியாளும் குழந்தை பிறக்கும் நேரத்தில் இடமில்லாமல் தவித்தது போல் இன்று எவரும் தவிக்காமல் எங்கள் வீட்டிற்கு வாருங்கள் என்று அழைக்கும் விளக்குகளாம் அவை.

கிறிஸ்துமஸ் நாளன்று பசுக்களுக்கு ராஜ மரியாதை செலுத்துகின்றனர் இத்தாலிய மக்கள். அன்று பசுக்களைக் குளிப்பாட்டி, அவைகளுக்கு விசேஷ மரியாதை செலுத்துவர்.

இயேசுநாதர் மாட்டுத் தொழுவத்தில் பிறந்த போது, அருகிலிருந்த ஒரு பசு, மாட்டுத் தொழுவத்தில் நிலவிய கடுங்குளிரிலிருந்து இயேசு நாதரைக் காப்பாற்றுவதற்காக அவரை அவ்வப்போது நெருங்கி பெருமூச்சு விட்டு அவருக்கும் வெப்பம் கொடுத்ததாம். எனவே இத்தாலியர்கள் கிறிஸ்துமஸ் அன்று பசுக்களுக்கு மரியாதை செய்கின்றனராம்.

ஹோலந்து தேசத்து குழந்தைகளுக்கு டிசம்பர் மாதத்தின் ஆரம்பித்திலேயே கிறிஸ்துமஸ் பரிசுகளைக் கொண்டு வந்து கொடுத்து விடுவார் செண்ட் நிக்கொலஸ். இயேசு பிறந்த விழாவானது ஆரம்பத்தில் ஒளி விருந்து என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. அமெரிக்காவை சேர்ந்த டே என்ற பெண்மணிதான் இயேசு பிறந்த புனித நாளுக்கு கிறிஸ்துமஸ் என்று பெயர் சூட்டினாள். பிரெஞ்சு நாட்டினர் அதே நாளை நோயல் எனவும், ஜெர்மனியர் வெய்நேக்ஷன் எனவும், ஸ்பெயின் நாட்டினர், நேவிடட் எனவும், ஸ்கொட்லாந்து நாட்டினர் யூல் எனவும், இத்தாலியர் நாடோல்லே எனவும் அழைக்கின்றனர்.

திருக்குறள்

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.
                        (குறள்: 664)

நான் இந்தச் செயலை இப்படிச் செய்யப் போகிறேன் என்று சொல்லுவது எல்லார்க்கும் சுலபம்; சொல்லியபடியே அதைச் செய்து முடிப்பதுதான் கடினம்.

To say (how an act is to be performed) is (indeed) easy for any one; but far difficult it is to do according to what has been said.

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்.
                                (குறள்: 410)

விலங்கை நோக்க மக்கள் எவ்வளவு வேறுபட்டவரோ, சிறந்த நூலைக் கற்றவரை நோக்கக் கல்லாதவர் அவ்வளவு வேறுபட்டவர்.

As beasts by the side of men, so are other men by the side of those who are learned in celebrated works.

07. தீபாவளித் திருநாள்

தீபாவளி அனைத்து இந்தியர்களாலும் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. தீபாவளி பண்டிகை நம் மனத்தையும், நட்பையும், உறவுகளையும் புதுப்பித்துக் கொள்ள உதவுகிறது. குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் எல்லோருக்கும் மனதில்  புத்துணர்ச்சியையும் மறுமலர்ச்சியையும் ஏற்படுத்தித் தருகிறது. அப்படிப்பட்ட, தீபாவளிப் பண்டிகை பற்றித் படித்துத் தெரிந்து கொள்வோம்.

ஸ்ரீகிருஷ்ணர், நரகாசுரனை வதம் செய்தார். அசுரன் அழிந்த நாளை மகிழ்ச்சியாக பட்டாசு வெடித்து, தீபாவளியாக கொண்டாடுகிறோம். பேராசை, பெருங்கோபம், பொருட்பற்று, பகுத்தறிவின்மை, கர்வம், பொறாமை ஆகிய தீய குணங்கள், அசுரர்களுக்கு இணையானவை. பட்டாசைப்போல் இவை பொசுங்கி, நாம் நற்குணங்களுடன் திகழவேண்டும் என்கிற தத்துவமும் இதில் அடங்கியிருக்கிறது.

தீபாவளித் திருநாள் கண்ணைக் கரிக்கும் எண்ணெய் குளியலுடன் ஆரம்பிக்கிறது. அதுவும் அதிகாலையில்  சூரிய உதயத்திற்கு முன் காய்ச்சின நல்லெண்ணெய்யை உடல் முழுவதும் தேய்த்து சற்று நேரம் ஊற வைத்து இளம் சூடான வெந்நீரில் ஒரு குளியல். இதனை, தீபாவளி நாளில், ”கங்கா ஸ்நானம் ஆச்சா?” என்று விசாரித்துக் கொள்வது வழக்கம்.

பிறகு எல்லாரும் புத்தாடை அணிந்து கொள்கிறோம்.  புத்தாடை உடுத்தி, இறைவனையும் பெரியோர்களையும் பணிந்து, வணங்குகிறோம். பெரியோரை வணங்கும் பழக்கம், நம் பணிவை வளர்க்கிறது. நமது ஆணவ, அகங்காரத்தை போக்கிச் செம்மைப்படுத்துகிறது.

தீபம் என்றால் விளக்கு; ஆவளி என்றால் வரிசை. தீபாவளி என்றால், தீபங்களின் வரிசை. முற்காலங்களில், தீபாவளியன்று, வரிசையாக விளக்கேற்றி வழிபடுவார்கள். அந்த வழக்கம் காலப்போக்கில் மாறிவிட்டது. மேலும் இந்த நன்னாளில், ஸ்ரீமகாலட்சுமி மற்றும் ஸ்ரீகுபேர பூஜைகளைச் செய்து வழிபடுகின்றனர்.

அதன் பிறகு பலகாரம் சாப்பிடுகிறோம். வீட்டில் பல இனிப்பு மற்றும் காரவகைகள் செய்திருப்பார்கள். முதலில் இஞ்சி அல்வா, பிறகு நாம் சாப்பிடப் போகும் பலகாரங்கள் ஜீரணிக்க இது உதவும். இனிப்புகளை இறைவனுக்கு நைவேத்தியம் செய்து, நாமும் சாப்பிட்டு, அனைவருக்கும் வழங்குகிறோம். எல்லோரும் இன்பத்தை நாம் உணர்ந்து, பிறருக்கும் அந்த இன்பத்தை வழங்க வேண்டும். அதனை வலியுறுத்தவே, இனிப்பு வழங்குகிறோம்.

அடுத்து எல்லாக் குழந்தைகளும் விரும்பும் பட்டாசுகள். யார் வீட்டில் முதலில் பட்டாசு வெடிக்கும் என்பதில் குழந்தைகளுக்குள் ஒரு போட்டியும் உண்டு. ஒவ்வொரு வருடமும் புதுவகையான பட்டாசுகள் கடைகளுக்கு வரும். குழந்தைகள் ஒவ்வொரு கடையாக சென்று பட்டாசுகள் வாங்கி வருவார்கள். ஓலை வெடி, அணுகுண்டு, சர வெடி, பொட்டு வெடி, பாம்பு வெடி, ராக்கெட் வெடி, ரயில் வெடி, துப்பாக்கியில் போடும் சுருள் வெடி, மத்தாப்பூ, பூந்தொட்டி, சாட்டை மத்தாப்பூ என்று பல விதமான வெடிகள் உண்டு.

தீபாவளி சில பகுதிகளில் மூன்று நாட்களுக்கு கொண்டாடப் படுகிறது. முதல் நாள், லக்ஷ்மி பூஜை. இரண்டாம் நாள் தீபாவளி, மூன்றாம் நாள் நண்பர்களையும் உறவினர்களையும் சென்று பார்க்கும் நாள். நண்பர்களுடன் சேர்ந்து புது திரைப்படம் காணச் செல்வார்கள். சாயங்காலம் குடும்பத்தினருடன் சேர்ந்து கோயிலுக்குச் செல்வார்கள். 

நமக்கு அதிகப்படியான உறக்கம், சோர்வு, பயம், கோபம், சோம்பல், காலந் தாழ்த்திச் செயல்படுதல் போன்ற தீய குணங்களைத் தள்ளி உற்சாகம், புத்துணர்ச்சி, நட்பு, அன்புடன் பகிர்தல் போன்ற நற்குணங்களைக் தரும் தீபாவளியைக் கொண்டாடுவோம்.

திருக்குறள்

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.                            (
குறள்:236)

பிறர் அறியுமாறு அறிமுகமானால் புகழ் மிக்கவராய் அறிமுகம் ஆகுக; புகழ் இல்லாதவர் உலகு காணக் காட்சி தருவதிலும், தராமல் இருப்பதே நல்லது.

If you are born (in this world), be born with qualities conductive to fame. From those who are destitute of them it will be better not to be born.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.                               
(குறள்:26)

பிறர் செய்வதற்கு முடியாத செயல்களைச் செய்பவரே மேன்மக்கள்; செய்ய முடியாதவரோ சிறியவரே.

The great will do those things which are difficult to be done; but the mean cannot do them.

20. விருந்தினர் உபசரிப்பு

வரவேற்பு

நமது வீட்டிற்கு வரும் விருந்தினரை சிரித்த முகத்துடன் வரவேற்க வேண்டும். கதவைத் திறந்தவுடன் விருந்தினரின் முகம் பார்த்து, புன்னகையுடன் அவர்களை “உள்ளே வாருங்கள்” என்று அன்புடன் அழைக்க வேண்டும்

அமரச்செய்தல்

விருந்தினரை அன்புடன் “அமருங்கள்” என்று சொல்லி அவருக்கான இருக்கையை காட்டி அமரச் செய்ய வேண்டும்.

தாகம் நீக்கல்

விருந்தினர் சௌகரியமாக அமர்ந்தவுடன் அவருக்கு ‘பருக’ நீரோ அல்லது குளிர் பானமோ கொடுத்து அவரை ஆசுவாசப் படுத்துவது மிகச் சிறந்தது.

நலம் விசாரித்தல்

விருந்தினரிடம் நலம் விசாரிப்பது மிகவும் அவசியம். நீங்கள் நலமாக இருக்கிறீர்களா? உங்கள் மனைவி அல்லது கணவர் நலமாக இருக்கிறார்களா? உங்கள் குழந்தைகள் நலமாக இருக்கிறார்களா? போன்ற கேள்விகளைக் கேட்டு அவர் கூறும் பதில்களை கவனமாக கேட்டுக் கொள்ள வேண்டும்.

உணவு அல்லது பலகாரங்கள் அளித்தல்

விருந்தினர்களின் விருப்பம் அறிந்து அவருக்கு உணவு அல்லது சிற்றுண்டி வழங்க வேண்டும். உணவுகளை விருந்தினருக்கு பரிமாறிய பின் தனக்கு பரிமாறிக் கொள்ள வேண்டும்.

விருந்தினர் பேசும் வரைக் காத்திருத்தல்

விருந்தினரிடம் என்ன காரணத்திற்காக வந்தீர்கள்? போன்ற கேள்விகளை தவிர்க்க வேண்டும். அவராகவே சொல்லும் வரை காத்திருப்பது மிகச் சிறந்தது.

விருந்தினர் கேள்விக்கு இன்முகத்துடன் பதில் அளித்தல்

விருந்தினரின் கேள்விகளுக்கு இன்முகத்துடன் பதில் அளித்தல் அவசியம். உங்களுக்கு பொருந்தாத மனம் ஒவ்வாத பேச்சுக்களை சாதுர்யமாக தவிர்ப்பது அல்லது தள்ளிப் போடுவது மிக அவசியம்.

வருகைக்கு நன்றி கூறல்

விருந்தினர் கிளம்பிச் சொல்கையில் அவர் வருகைக்கு நன்றி கூற வேண்டும். விருந்தினருக்கு தாம்பூலம், மஞ்சள், குங்குமம், பழம் அல்லது ஏதெனும் பரிசு கொடுப்பதும் வழக்கம்.

வழி அனுப்புதல்

விருந்தினருடன் தானும் வெளி நடந்து அவர் வாகனத்தில் ஏறிச் செல்லும் காத்திருந்து அவரை கையசைத்து வழி அனுப்புவது மிகச் சிறப்பு.

பயண நலம் விசாரித்தல்

விருந்தினர் தொலைதூரத்தில் இருந்து வந்தவராக இருந்தால் அவர் தன்னுடைய இருப்பிடம் போய் சேர்ந்த பின் தொலைபேசியில் அழைத்து அவருடைய பயண செளகரியங்களை விசாரிப்பது மேலும் சிறந்த செயல்.

15. பேராசை பெருநஷ்டம்

கந்தன் என்ற ஒரு ஏழை தன் மனைவியுடன் குடிசையில் வாழ்ந்து வந்தான். வயதாகி விட்டதாலும் வேலைக்கும் செல்ல முடியாததாலும் அவர்கள் உண்ண உணவின்றி தவித்தனர்.

இந்நிலையில் ஒரு நாள் அவன் ஆண்டவனை நோக்கி “இறைவா எங்களை ஏன் இப்படி படைத்தாய். இது இப்படியே நீடித்தால், வறுமை தாங்காது, நாங்கள் இறப்பதை தவிர வேறு வழியில்லை” என வேண்டினான். உடன் இறைவன் நேரில் தோன்றி, அவனுக்கு வாத்து ஒன்றை பரிசளித்தார். அந்த வாத்து ஒவ்வொரு நாளும் ஒரு பொன் முட்டை இடும் என்றும், அதை அன்றன்று விற்று உன் வாழ்நாளைக் கழிக்கலாம் என்றும் கூறி மறைந்தார்.

வாத்து தினம் ஒரு முட்டையிட அவர்கள் வாழ்வு தினமும் இனிதாகக் கழிந்தது.

ஒரு நாள் கந்தனின் மனைவி அவனிடம் “தினம் தினம் இது பொன் முட்டையிட்டு அதை விற்று நாம் பிழைக்கிறோம். அதற்கு பதில் இதை அறுத்து அதன் வயிற்றில் உள்ள மொத்த பொன் முட்டைகளையும் எடுத்து விற்று நாம் பெரிய பணக்காரராக ஆகிவிடலாமே” என்றாள்.

கந்தனும் அவளது பேச்சைக் கேட்டு, அந்த வாத்தை பிடித்து அதன் வயிற்றைக் கிழித்தான். ஆனால் அதன் வயிற்றில் ஏதும் இல்லை. மற்ற வாத்துக்களைப் போலவே இருந்தது.

முட்டாள் கந்தனும்,மனைவியும் தினமும் அடையும் லாபத்தை விட்டு ஒரே நாளில் பணக்காரராகும் பேராசையுடன் செயல்பட்டதால் இருந்ததையும் இழந்தனர்.

கீழே கொடுத்துள்ள உயிர்மெய்(வ…வௌ) எழுத்துக்களை மூன்றுமுறை சத்தமாகப் படிக்கவும்.

கீழே கொடுத்துள்ள வார்த்தைகளை மூன்றுமுறை சத்தமாகப் படிக்கவும்.